/ செய்திகள் /  கூட்டணி கட்சிகள் போராட்டம்: தி.மு.க.,வுக்கு பா.ஜ., கண்டனம்

 கூட்டணி கட்சிகள் போராட்டம்: தி.மு.க.,வுக்கு பா.ஜ., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பாகிஸ்தானால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போது, குற்றவாளிகளை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் போராடவில்லை. ஆனால், சென்னையில் முழு போலீஸ் பாதுகாப்புடன், ஒரு போராட்டம் நடந்துள்ளது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து, சென்னையில் நேற்று முன்தினம் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: பாகிஸ்தானால் நடத்தப்பட்ட கோழைத்தனமாக பயங்கரவாத தாக்குதலில், பஹல்காமில் அப்பாவி இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை கண்டித்து வீதிகளில் போராடவில்லை. ஆனால், சென்னையில் நேற்று முன்தினம் முழு போலீஸ் பாதுகாப்புடன், ஒரு போராட்டம் நடந்தது. ஆசிரியர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு ஊழியர்கள் போராடினால் கைது செய்யப்படுகின்றனர். தி.மு.க.,வை பொறுத்தவரை, திருப்திபடுத்துதல் எப்போதும் அவர்களின் முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.bஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்கு

அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு படையினரால், ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து, முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த, 250 பெண்கள் உட்பட 800க்கும் மேற்பட்டோர், சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட முயன்றனர். அவர்களுடன், வி.சி., தலைவர் திருமாவளவன், அவரது கட்சி எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பேரணியாக செல்ல முயன்றவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, திருமாவளவன் உட்பட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !