/ செய்திகள் / கிறிஸ்டோபர் திலக்கிற்கு எம்.பி., பதவி: காங்., கோஷ்டி தலைவர்கள் அதிருப்தி

கிறிஸ்டோபர் திலக்கிற்கு எம்.பி., பதவி: காங்., கோஷ்டி தலைவர்கள் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நமது நிருபர் -அகில இந்திய காங்கிரஸ் செயலர் கிறிஸ்டோபர் திலக், ராஜ்யசபா எம்.பி., வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, தமிழக காங்கிரசில் அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு மிகவும் நெருக்கமான கிறிஸ்டோபர் திலக், கட்சியின் எஸ்.சி., - எஸ்.டி., அணிகளின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். தமிழகத்தில் கட்சி வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்காமல், டில்லி மேலிட தொடர்பில் இருந்த கிறிஸ்டோபர் திலக்கிற்கு வாய்ப்பு வழங்கியதை, தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் கடும் அதிருப்தியுடன் விமர்சிக்கின்றனர். தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: முன்னாள் மாநில தலைவர்கள் அழகிரி, திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்டோர் இம்முறை ராஜ்யசபா 'சீட்' எதிர்பார்த்தனர்; ஆனால், கிடைக்கவில்லை. இந்த முறை எம்.பி., பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த பீட்டர் அல்போன்சுக்கும், திருநெல்வேலி அல்வா தான் கிடைத்துள்ளது. அதேபோல, கிருஷ்ணகிரி தொகுதியில், கடந்த லோக்சபா தேர்தலில் சீட் கிடைக்காத செல்லக்குமாருக்கும் ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படவில்லை. அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதனை, திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக ராகுல் தேர்வு செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் சசிகாந்த் செந்தில் நிறுத்தப்பட்டார். இதனால், அவரும் ராஜ்யசபா எம்.பி., பதவியை எதிர்பார்த்தார். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராகவும், ஊடகத் துறை தலைவராகவும் உள்ள கோபண்ணாவும் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காக போராடினார். அவருக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. இதனால், தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் பலரும், ராஜ்யசபா சீட் விஷயத்தில், கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !