/ செய்திகள் / பிரதமர் மோடியை பயங்கரவாதி என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினாரா?

பிரதமர் மோடியை பயங்கரவாதி என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினாரா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''எதிர்க்கட்சியினரை மிரட்டுவதால், பிரதமர் மோடியை பயங்கரவாதி என குறிப்பிட்டேன்,'' என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். சென்னையில் நேற்று அவர் பேட்டியளித்தபோது, மோடியை 'பயங்கரவாதி' என குறிப்பிட்டார். அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அதற்கு கார்கே விளக்கம் அளித்தார். அவர் அளித்த பேட்டி: பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல், எதிர்க்கட்சியினர் தடுப்பதாக, பா.ஜ., சொல்வது பொய். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், பிரதமர் மோடியின் நோக்கம் சரி இல்லை. மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இல்லை என தெரிந்தும், மசோதாக்களை கொண்டு வந்தது ஏன்? 'மாநிலங்களின் ஒருமைப்பாட்டை சிதைக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த மாநிலங்களை தண்டிக்க வேண்டும்' என, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நினைக்கின்றனர். வடக்கு, தெற்கு என, பா.ஜ., பிரித்து பார்க்கிறது. அண்ணாதுரை பெயரில் கட்சியை வைத்துக் கொண்டு, பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்திருக்கிறது. பிரதமர் மோடிக்கு, பெண்கள் விடுதலை, சமூக நீதி, ஜனநாயகம் என்பதே கிடையாது. அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து, எதிர்க்கட்சிகளை பா.ஜ., மிரட்டி, அச்சுறுத்துகிறது. அதன் அடிப்படையில், பிரதமர் மோடி ஒரு பயங்கரவாதி. ராகுலின் பிரசார திட்டம் மற்றும் சூழ்நிலை காரணமாகவே, அவரும், முதல்வர் ஸ்டாலினும் இணைந்து பிரசாரம் மேற்கொள்ளவில்லை. அதை பெரிதாக்க வேண்டாம். காங்கிரஸ் தலைமை அனுமதியுடன், த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்து பேசியதாக பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். நான் தான் காங்கிரஸ் தலைவர். என்னை பிரவீன் சக்கரவர்த்தி பார்க்கவே இல்லை. இவ்வாறு கார்கே கூறினார். பேட்டியின்போது, பிரதமர் மோடியை 'பயங்கரவாதி' என கார்கே கூறியதும், அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். உடனே, ''மோடியை தனிப்பட்ட முறையில் நான் கூறவில்லை. ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்வதால், அப்படி குறிப்பிட்டேன்,'' என கார்கே விளக்கம் அளித்தார்.

'ராகுலும் ஸ்டாலினும் மன்னிப்பு கேட்கணும்'

மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், சென்னையில் அளித்த பேட்டி: நாட்டு மக்களால், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடியை 'பயங்கரவாதி' என்கின்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கே அப்படி கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் மோடியை 'பயங்கரவாதி' என அழைத்து அவமதிக்கும் அளவுக்கு, காங்., மற்றும் தி.மு.க., கீழ்த்தரமாக இறங்கியதை நினைத்து வெட்கப்படுகிறேன்.பிரதமரை தாக்குவதன் வாயிலாக, ஒட்டு மொத்த இந்தியர்களையும், பயங்கரவாதிகள் என்று அழைப்பதாகவே அர்த்தமாகிறது. பிரதமருக்கும், அவருக்கு ஓட்டளித்த மக்களுக்கும் இழைக்கப்பட்ட இந்த அவமதிப்பிற்காக, ராகுலும், ஸ்டாலினும் மன்னிப்பு கேட்க வேண்டும். இவர்களின் கொடூர ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தால், தேர்தல் முடிவு தீர்மானிக்கப்பட்டு விட்டது. பிரதமர் மோடி மீதான தனிப்பட்ட தாக்குதல், அதை மாற்றப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !