/ செய்திகள் / ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: எமகண்டத்தில் தப்பிய அமைச்சர்

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: எமகண்டத்தில் தப்பிய அமைச்சர்

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதியில், மக்கள் மன்றம் ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அமைச்சர் நேரு, 35 நிமிடம் காத்திருந்து ஓட்டளித்தார். திருச்சி மாநகராட்சி, 61, 63 ஆகிய இரண்டு வார்டுகளுக்கான, இரண்டு வாக்குச்சாவடிகள், திருச்சி மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில், காலை 7:08 மணிக்கு, அமைச்சர் நேரு அந்த மையத்தில் ஓட்டளிக்க வந்தார். அங்கிருந்த இரண்டு மையங்களிலும், வி.வி.பேட் இயந்திரம் பழுதடைந்ததால், அவர் ஓட்டளிக்க இயலவில்லை. அதனால், அவர் அங்கேயே காத்திருந்தார். இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது பற்றிய தகவல் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, இரண்டு மையங்களுக்கும் தேவையான புதிய வி.வி. பேட் இயந்திரங்கள் 7:20 மணிக்கு கொண்டு வந்து பொருத்தப்பட்டது. இதனால், 35 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதற்கிடையே,தேர்தல் நடத்தும் அலுவலர் சாலை தவவளவன், அந்த ஓட்டுச் சாவடிக்கு வந்து பார்வையிட்டார். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அமைச்சர் நேரு மற்றும் 100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 35 நிமிடம் காத்திருந்து, ஓட்டுப்பதிவு செய்தனர்.

எமகண்டத்தில் தப்பிய அமைச்சர்:

ஓட்டுப்பதிவு நாளில் காலை, 6:00 முதல் 7:30 மணி வரை எமகண்டம். அதே சமயம், அமைச்சர் நேரு ஓட்டளிக்க சென்ற மக்கள் மன்றம் மையத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. அதன் காரணமாக, 30 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த அமைச்சர், எமகண்டம் முடிந்து, 7:30 மணிக்கு மேல், 7:40 மணியளவில் ஓட்டளித்து விட்டுச் சென்றார். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் நேரு, நேரம் காலம் பார்க்காமல் ஓட்டளிக்க வந்தாலும், அவரது நல்ல நேரம் இயற்கையாகவே, எமகண்டத்தில் ஓட்டளிக்காமல் தப்பி விட்டார். அதனால், அவரது வெற்றி இப்போதே உறுதியாகி விட்டது என, உடன்பிறப்புகள் தெரிவித்தனர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஏப் 24, 2026 03:44

தீம்க்காவுக்கு இந்த முறை தோல்வி வாய்ப்பு அதிகம்.


sankaranarayanan
ஏப் 24, 2026 01:11

அய்யயோ அமைச்சர் நேருவே எமகண்டத்தில் ஓட்டுச்சாவடிக்கு முதலில் வந்துவிட்டார் அப்போ நிச்சயம் திராவிட மாடல் அரசு தோற்றுவிடும் இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை


vijai hindu
ஏப் 23, 2026 23:26

தோல்வி உறுதியாக விட்டது TVK வெற்றி நடை போடுகிறது