/ செய்திகள் /  ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் 100 சதவீத ஓட்டு கிடைக்கும்: பா.ஜ.,வினருக்கு மோடி அறிவுரை

 ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் 100 சதவீத ஓட்டு கிடைக்கும்: பா.ஜ.,வினருக்கு மோடி அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மக்களுடன் தினமும் தொடர்பில் இருந்து, சிறு சிறு உதவிகளை செய்தால் தான், அவர்கள் மனதில் இடம் பெற்று, ஆதரவாளர்களாக இருப்பவர்களின் ஓட்டுகளையும் 100 சதவீதம் பெற முடியும்' என, தமிழக பா.ஜ.,வினருக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரு நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி, மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில், கடந்த ஞாயிறன்று பங்கேற்று பேசினார். பின், சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பான விபரங்களை, தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது, அவர் கூறியுள்ளதாவது: தமிழக மக்கள், தி.மு.க., மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்; தே.ஜ., கூட்டணி அரசை விரும்புகின்றனர். எனவே, தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றியே தீர வேண்டும் என்று கருதி, முழு மூச்சுடன் களப் பணியாற்ற வேண்டும். பா.ஜ.,வுக்கு ஆதரவான ஓட்டுகளை முழுதுமாக பெற வேண்டும் என்றால், ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். அதற்கு, பா.ஜ.,வினர் ஒவ்வொருவரும், அவரவர் பகுதியில் வசிக்கும் மக்களுடன் தினமும் தொடர்பில் இருக்க வேண்டும்; அவர்களுக்கு தேவைப்படும் சிறு சிறு உதவிகளை, மனம் கவரும் வகையில் செய்து தர வேண்டும். அப்போது தான், மக்கள் மனதில் இடம்பெற முடியும். இப்படி செய்தால் தான், நம் ஆதரவாளர்களாக உள்ளவர்களின் ஓட்டுகளையும் 100 சதவீதம் பெற முடியும். இதை, 'பூத் கமிட்டி' பொறுப்பாளர்களிடம் தெரிவித்து, அவர்களுடன் சேர்ந்து நீங்களும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !