/ டிஷ்யூம் / லேப்டாப் - படிப்புக்கா, ஓட்டுக்கா

லேப்டாப் - படிப்புக்கா, ஓட்டுக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இது நாட்டுக்கான திட்டம்

வீரமணி ஜெயகுமார், தி.மு.க., மாணவர் அணி செயலர் இ ந்த திட்டம் ஓட்டுக்கானது என விமர்சிக்க, அ.தி.மு.க.,வுக்கு எள் அளவும் தகுதி கிடையாது. பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் எனும் முன்மாதிரியான திட்டம் துவக்கப்பட்டது. அந்த மாணவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறதா? மேலும், 14 வயதுக்குட்பட்ட சிறுமியருக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுக்க, இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறதா? அனைத்தும் இளைஞர்கள் நலத்திட்டங்கள். அதேபோல், ஓட்டு அரசியலை முன்னிறுத்தி, விலையில்லா லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அது, நாட்டுக்கான திட்டம். அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளாக, தமிழக இளைஞர்கள் நலனுக்காக எந்தவித திட்டங்களும் செயல்படுத்தாதவர்கள் இதைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள். ஆனால், தி.மு.க., அரசு, படிப்பு ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி, இளைஞர்களின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், அவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால், கல்லுாரி மாணவ - மாணவியர் உயர் கல்வியை நோக்கி வருகை தருகின்றனர். நாட்டிலேயே, உயர் கல்வி சேர்க்கையில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதற்கெல்லாம், தி.மு.க., அரசின் நலத்திட்டங்களே சாட்சி.

தேர்தலை மனதில் வைத்தே 'லேப்டாப்'

கே.பி.அன்பழகன், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,ஜெ யலலிதாவின் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 'விலையில்லா மடிக்கணினி' திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், தி.மு.க., தனது ஆட்சி காலம் முடியும் தறுவாயில், ஓட்டு வங்கியை மனதில் வைத்து மடிக்கணினி கொடுத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், பிளஸ் 1 மாணவ - மாணவியருக்கு, விலையில்லா மடிக்கணினி மற்றும் விலையில்லா சைக்கிள் வழங்கினோம். அதிலும், தகுதியுடையோர், தகுதி இல்லாதோர் என நாங்கள் யாரையும் பிரிக்கவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், கடைசியாக, தேர்தல் நெருங்கும் நேரத்தில், 10 லட்சம் இளைஞர்களுக்கு மடிக்கணினி வழங்குகின்றனர். இதை, மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தேர்தலை மனதில் வைத்து, விலையில்லா மடிக்கணினிகளை தி.மு.க., வழங்கியது. ஆனால், அது இந்த தேர்தலில் எடுபடாது. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்திய காரணத்தால்தான், கடந்த 2019ம் ஆண்டிலேயே, தமிழகத்தின் உயர் கல்வி மாணவர் சேர்க்கை, 51.4 சதவீதமாக உயர்ந்து, நாட்டிலேயே உயர் கல்வி சேர்க்கையில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் உயர் கல்வி சேர்க்கை, 47 சதவீதமாக குறைந்துள்ளது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !