/ செய்திகள் / மேலுார் காங்கிரஸ் வேட்பாளரை வெளியேற்றிய உள்ளூர் நிர்வாகிகள்

மேலுார் காங்கிரஸ் வேட்பாளரை வெளியேற்றிய உள்ளூர் நிர்வாகிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேலுார்: மதுரை மாவட்டம் மேலுாரில் காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதனை, கட்சி தலைமை அறிவித்த நிலையில் வேட்பாளருக்கு எதிராக உள்ளூர் நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி கூட்டத்தில் இருந்து அவரை வெளியேற்றினர். கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி., விஸ்வநாதனை, மேலுார் காங்கிரஸ் வேட்பாளராக நேற்று முன்தினம் கட்சி அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலுார் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் 'கக்கன் பிறந்த பூமியில் காங்கிரஸ் கட்சியை அழிக்கலாமா, மேலுார் தொகுதியின் வெற்றி வாய்ப்பை இழக்கலாமா, கட்சியின் வளர்ச்சியை தடுக்கலாமா, மண்ணின் மைந்தர்களுக்கு இடமில்லையா, வெற்றி வாய்ப்புள்ள தொகுதி கண்ணெதிரில் பறிபோகிறதே' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.சீட் கேட்டு விருப்பமனு கொடுத்தவர்கள், கட்சி நிர்வாகிகள் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அங்கு வேட்பாளர் விஸ்வநாதன் ஆதரவு கேட்டு வரவே, நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு 'வேட்பாளரே வெளியே போ' என கோஷமிடவே அவர் வெளியேறினார். சிறிது நேரத்தில் விஸ்வநாதன் காங்., வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார். நிர்வாகிகள் கூறியதாவது: மேலுார் பகுதி நிர்வாகிகள் விருப்பமனு அளித்து இருந்தனர். அவர்களை கண்டுகொள்ளாமல், இத்தொகுதிக்கு தொடர்பே இல்லாத ஒருவரை தேர்வு செய்துள்ளனர் என்றனர். சிதம்பரம், மாணிக்கம்தாகூர் தங்கள் ஆதரவாளர்களை சிபாரிசு செய்திருந்தனர். இந்த குழப்பத்திற்கு தீர்வுகாண கட்சித்தலைவர் கார்கே சிபாரிசில், ராகுல் இவரை தேர்வு செய்துள்ளார் என்கின்றனர் கட்சியினர். விஸ்வநாதன் ஆதரவாளர்கள் கூறுகையில், 'தெலங்கானாவில் கட்சிக்காக சிறப்பாக உழைத்ததால் இந்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மேலுார் தொகுதிக்கு மட்டும் தனியாக வேட்பாளரை அறிவித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rathna
ஏப் 07, 2026 13:23

இந்த மாதிரி அடிதடி காரணத்தால் தான் பல பேர் வேட்டியில் இருந்து பான்ட் சட்டைக்கு மாறி விட்டனர். இல்லாவிட்டால் தெருவில் அம்போ


Bharath Sundar
ஏப் 07, 2026 10:34

காங்கிரஸில் அடிதடி இல்லை என்றால் தான் ஆச்சரியம்.வேட்டி சட்டை கிழிப்பு எதுவும் நடக்கவில்லை.காங்கிரஸ் அடிதடி தானா?


RAVINDRAN.G
ஏப் 07, 2026 10:12

அப்போ ராகுல் காந்தி வேள்ப்பாளராக நின்றால் ராகுல் மண்ணின் மைந்தர் இல்லை என்று ஒதுக்கிவிடுவார்களா இல்லை ஒத்துழைப்பார்களா? நாம் இருப்பது இந்தியாவில் என்ற எண்ணம் ஏன் நமக்கு இருப்பதில்லை. இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியாவில் எந்த இடத்திலும் தேர்தலில் நிற்கலாம் அதை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். அதைப்போல மேலிடம் நியமித்த வேட்பாளரை ஆதரிப்பதே கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது. இவர்களுக்குளேயே பிரிவினை இருந்தால் இவர்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால் நாட்டை விற்றுவிடுவார்கள்.


Arul Narayanan
ஏப் 07, 2026 17:47

ராகுல் வெற்றி பெற்றால் ஒரு ஏஜென்ட்டை நியமித்து தொகுதியை கவனித்து கொள்வார். இவர் ஜெயித்து விட்டால் கட்சி அரசியலை பார்க்க டெல்லிக்கு போய் விடுவார். அடுத்த தேர்தலில் வேட்பாளராக தான் திரும்பி வருவார்.


duruvasar
ஏப் 07, 2026 09:42

இந்த பொங்கலை ஒட்டு போடுவதில் காட்டுங்கள்.