/ செய்திகள் /  அரசு விழாவில் அமைச்சர் பிரசாரம்; ஈரோடு கலெக்டர் மழுப்பல்

 அரசு விழாவில் அமைச்சர் பிரசாரம்; ஈரோடு கலெக்டர் மழுப்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ஈரோட்டில் அரசு விழாவில், அமைச்சர் முத்துசாமி, 'உதயசூரியன்' சின்னம் அச்சிட்ட பையில், அரிசி மற்றும் தட்டு வினியோகம் செய்தது, மக்களை மட்டுமின்றி, விழாவில் பங்கேற்ற அரசு அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர், பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கந்தசாமி முன்னிலை வகித்தார். அரசு விழாவில் வழங்கப்பட்ட ஸ்கூட்டர், தையல் மிஷினுடன், 'வாக்களிப்பீர் உதய சூரியனுக்கு; ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.,' என அச்சிடப்பட்ட பையில், 5 கிலோ அரிசி, கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் தட்டு ஆகியவற்றை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். முன்னதாக தி.மு.க., பிரசார வாகனத்தில் கொண்டு வரப்பட்ட இந்த பைகளை, பத்திரிகையாளர்கள் படம் எடுக்க சென்றதும், அமைச்சருடன் வந்த வாட்டசாட்டமான ஆசாமிகள், ஒருமையில் பேசி மிரட்டினர். கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில், அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஓட்டு சேகரித்து, அரிசி வழங்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிகழ்வுகளின்போது அமைச்சரின் அருகிலேயே, கலெக்டர் கந்தசாமி நின்று கொண்டிருந்தார். அரசு நிகழ்ச்சியில், அமைச்சரின் செயல் குறித்து கேட்டதும், கலெக்டர் கந்தசாமி கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறை தற்போது அமலில் இல்லை. விதிமுறை அமலில் இருந்தால், அமைச்சரை அப்படி செய்ய விடமாட்டோம். நானும், அரிசி பையை பார்த்தேன். அதில், தி.மு.க., விளம்பரம் இருந்தது. அந்த இடத்தில் எதையும் சொல்ல முடியவில்லை. இனி அதுபோல் நடக்காமல் பார்த்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !