/ செய்திகள் /  மங்கலம் தொகுதி தி.மு.க., வேட்பாளராக சிவராந்தகம் ரங்கன் அறிமுகம்

 மங்கலம் தொகுதி தி.மு.க., வேட்பாளராக சிவராந்தகம் ரங்கன் அறிமுகம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மங்கலம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ரங்கனின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என, தி.மு.க., அமைப்பாளர் சிவா நம்பிக்கை தெரிவித்தார். மங்கலம் தொகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சிவராந்தகம் கிராமத்தில் நடந்தது. தொகுதி பொறுப்பாளர் முருகதாஸ் தலைமை தாங்கினார். சாரங்கம், ஸ்ரீஹரி சீத்தாராமன், முரளி, அய்யனார், கல்யாண், தட்சிணாமூர்த்தி, புஷ்பலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பங்கேற்று, மங்கலம் தொகுதியில் தி.மு.க., சார்பில், போட்டியிடும் சிவராந்தகம் ரங்கனை அறிமுகம் செய்து பேசுகையில், 'மங்கலம் தொகுதியில் குமரவேல் இரண்டு முறை தி.மு.க., சார்பில் நின்று குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். மூன்றாவது முறையாக போட்டியிட அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. ஆகையால் தலைமை கழகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள சிவாரந்தகம் ரங்கன், மங்கலம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக களம் இறங்குகிறார். 40 ஆண்டுகள் தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களுடன் அரசியல் செய்த அனுபவம் பெற்றவர். அவர் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 நாள் தேர்தல் களத்தில் தி.மு.க., நிர்வாகிகள் அயராது உழைத்தால் தான் திராவிடமாடல் ஆட்சியை புதுச்சேரியில் அமைக்க முடியும்.கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஓரணியில் நின்று ரங்கனை வெற்றிபெற செய்ய வைக்க வேண்டும்' என்றார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், செந்தில்வேலன், தொகுதி செயலாளர் மணிகண்டன், இளஞ்செழிய பாண்டியன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், வில்லியனுார் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சபரிநாதன், ஏழுமலை, ராஜ் மற்றும் மங்கலம் தொகுதியை சேர்ந்த 48 கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !