/ செய்திகள் / காங்., பா.ஜ. வேட்பாளர் பட்டியல் வெளியானது! அண்ணாமலை ஆதரவாளர்கள் ‛மிஸ்சிங்

காங்., பா.ஜ. வேட்பாளர் பட்டியல் வெளியானது! அண்ணாமலை ஆதரவாளர்கள் ‛மிஸ்சிங்

சென்னை: நீண்ட இழுபறிக்கு பின், காங்கிரஸ், பா.ஜ. வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. காங்கிரசில், 12 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் தரப்பட்டுள்ளது. பா.ஜ. பட்டியலில்,அண்ணாமலைக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.வுக்கு, 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அ.தி.மு.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., புதிய நீதி, இந்திய ஜனநாயகம், புரட்சி பாரதம் கட்சிகள், வேட்பாளர்களை கடந்த வாரமே அறிவித்து விட்டன.வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் பா.ஜ. திணறியது. தமிழக பா.ஜ. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், சென்னை வந்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து, ஒரு தொகுதிக்கு 3 பேர் வீதம் பட்டியல் தயார் செய்து டில்லிக்கு அனுப்பினார்.உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ. பொதுச்செயலர் சந்தோஷ் பங்கேற்ற கூட்டத்தில், நேற்று முன்தினம் வேட்பாளர்கள் தேர்வு நடந்தது. கட்சியின் மத்திய தேர்தல் குழு நேற்று ஒப்புதல் அளித்தது.பா.ஜ. தேசிய பொதுச்செயலர் அருண்சிங் நேற்று மதியம் பட்டியலை வெளியிட்டார். அதில் மத்திய அமைச்சர் முருகன், எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், காந்தி ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகள் கிருத்திகாவுக்கு சீட் தந்துள்ளனர்.அண்ணாமலைக்கும் அவர் பரிந்துரைத்த ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு தரவில்லை. அமர்பிரசாத் ரெட்டிக்கு தளி தொகுதியும், ஏ.பி.முருகானந்தம் போட்டியிட திருப்பூர் தெற்கு தொகுதியும் அண்ணாமலை கேட்டிருந்தார்.தி.மு.க.வில் இருந்து வந்த முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி மகன் பிரேம்குமார், காங்கிரசில் இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி ஆகியோருக்கு சீட் தரப்பட்டுள்ளது. பட்டியலில் 5 பேர் பெண்கள்.Gallery

காங்கிரஸ் லிஸ்ட்

தி.மு.க. கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அக்கட்சி 28 தொகுதிகளுக்கு தலா 3 பேர் பரிந்துரை செய்து, டில்லிக்கு அனுப்பியது.பட்டியல் தயாரிப்பில் பணம் விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்ததும், மேலிடம் அதை நிராகரித்து விட்டது.இரண்டாவது பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதை காங்கிரசின் மத்திய தேர்வு குழு பரிசீலித்தது. கட்சி தலைவர் கார்கே, ராகுல் ஆகியோர் பங்கேற்றனர். நீண்ட விவாதத்திற்கு பின், 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்தனர்.பட்டியலை, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் நேற்று மதியம் வெளியிட்டார். மேலுார் தொகுதிக்கு வேட்பாளர் தேர்வில் சிக்கல் நீடிக்கிறது. அது மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.எம்.எல்.ஏ.க்கள் 17 பேரில், 5 பேருக்கு மட்டும் மறு வாய்ப்பு இல்லை. மற்றவர்கள் அதே தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். பிரின்ஸ், கணேஷ், ராஜ்குமார் சீட் மறுக்கப்பட்ட உறுப்பினர்கள். மற்ற இரண்டு பேரின் தென்காசி, விருத்தாசலம் தொகுதிகள் காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. பா.ம.க. ராமதாஸ் அணியில் இருந்து, சமீபத்தில் காங்கிரசுக்கு வந்த தமிழ் குமரனுக்கு பென்னாகரம் தரப்பட்டுள்ளது. இவர் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியின் மகன்.இதற்கிடையே, வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே, வேட்பு மனு தாக்கல் செய்த தஞ்சை மாவட்ட துணை தலைவர் முரளிதரனை, கட்சியில் இருந்து நீக்கி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அமித் ஷாவின் திட்டம் நிறைவேற ஓராண்டானது

இந்த தேர்தலில், தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியாக உள்ளார். இதற்காக, பலமான கூட்டணியை அமைத்து, ஓராண்டிற்கு முன்பே தேர்தல் பணிகளை துவக்க முடிவு செய்தார். கடந்த ஆண்டு ஏப்ரலில் சென்னை வந்து, பழனிசாமியை சந்தித்து, அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்த்தார். பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு நம் ராணுவம் நடத்திய பதிலடி போன்றவற்றால், அமித் ஷா இதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்த முடியவில்லை. கடந்த ஜனவரியில் பா.ம.க., அ.ம.மு.க. இணைந்தாலும், அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சு தாமதமானது. ஒரு வழியாக தொகுதி பங்கீடு முடிந்தும், வேட்பாளர் தேர்வு தாமதம் ஆனது. அது நேற்று முடிந்தது. அமித் ஷா திட்டத்தின் முதல் கட்டம் நிறைவேற ஓராண்டாகி உள்ளது.

கொடுத்த ஒரு தொகுதியை திருப்பி தந்த சண்முகம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகளை கேட்டிருந்தார். 'ஒரு தொகுதியில் தாமரை சின்னத்திலும், மதுரை மத்தி தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும் என் கட்சி போட்டியிடும்' என தெரிவித்தார். அதன்படி, மதுரை மத்தி தொகுதியில் குஷ்பு கணவர் சுந்தர் போட்டியிடுகிறார்.ஆனால், பா.ஜ., தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறனுக்கு மட்டும் திருப்பத்துாரில் சீட் வழங்கிவிட்டு, மற்ற தொகுதிகளுக்கு தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. புதிய நீதி கட்சிக்கு, உறுதி அளித்தவாறு தொகுதி தரவில்லை. எனினும், ஏ.சி.சண்முகம் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ''கடினமான தொகுதியை கொடுத்தனர். அதனால், திருப்பி கொடுத்து விட்டோம். அங்கு பா.ஜ. நல்ல வேட்பாளரை நிறுத்தி உள்ளது. அவர் பெயரை நான் தான் பரிந்துரைத்தேன்,'' என்றார்.

அண்ணாமலை விருப்பம்: விளக்குகிறார் பியூஷ் கோயல்

அண்ணாமலை, தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என, பியூஷ் கோயல் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:பா.ஜ. வேட்பாளர் பட்டியலில் மூத்த நிர்வாகிகள், மக்களுக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.வின் அனைத்து வேட்பாளர் களும் வெற்றி பெறுவர். தேர்தலுக்கு பின், பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். அர்ப்பணிப்புடன் கூடிய செயல்வீரரான அண்ணாமலை, தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை; மாநிலம் முழுதும் தேர்தல் பணியாற்ற விரும்பு கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !