/ செய்திகள் / ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பு; தேர்தல் கமிஷன் எதிர்பார்ப்பு

ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பு; தேர்தல் கமிஷன் எதிர்பார்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நமது சிறப்பு நிருபர் -எஸ்.ஐ.ஆர்.க்கு பின், சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், ஓட்டு சதவீதம் கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் ஆர்வமாக இருக்கிறது. தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தல் இன்று நடந்து வரும் நிலையில், எஸ்.ஐ.ஆர்., வாயிலாக, லட்சக்கணக்கான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் மாநிலம் முழுக்க, 14 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர். 'நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு என்பது தான், தேர்தல் கமிஷனின் இலக்காக உள்ள நிலையில், இம்முறை அந்த இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டும்' என்பதில், தேர்தல் கமிஷன் உறுதியாக இருக்கிறது. எனவே, தேர்தல் கமிஷன் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல புதுமையான முயற்சிகளை இம்முறை மேற்கொண்டது. 'தேர்தல் திருவிழா... தமிழகத்தின் பெருமிதம்,' என்ற முழக்கத்துடன், விழிப்புணர்வு பிரசாரங்கள், மாவட்டந்தோறும் நடத்தப்பட்டன. புதிய மற்றும் இளம் வாக்காளர்கள் மத்தியில் ஓட்டளிப்பதன் அவசியம் வலியுறுத்தும் விதமாக, கல்லுாரிகளில் 'வாக்காளர் எழுத்தறிவு கிளப்புகள்' துவங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அடையாளங்களை முன்வைத்தும், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று, அவர்கள் ஓட்டளிக்க செய்யும் வகையிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.சென்னை போன்ற பெருநகரங்களில், பொதுவாக ஓட்டு சதவீதம் குறைவாக இருப்பதை தவிர்க்க, தேர்தல் கமிஷன் சிறப்பு கவனம் செலுத்தியது. கடந்த தேர்தல்களில், 30 சதவீதத்திற்கும் குறைவாக ஓட்டுகள் பதிவான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.இன்று நடக்க உள்ள தேர்தலில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் கமிஷன் மேற்கொண்ட நடவடிக்கைகள் எந்தளவு பலன் தரப்போகிறது என்பதை, அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணிக்க தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !