/ செய்திகள் /  முதல்வரை தளபதி... தளபதி என புகழ்ந்த பன்னீர்செல்வம்

 முதல்வரை தளபதி... தளபதி என புகழ்ந்த பன்னீர்செல்வம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: முதல்வர் ஸ்டாலினை, 'தளபதி, தளபதி...' என வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்தார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். தி.மு.க., வில் இணைந்த பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த பன்னீர்செல்வம் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உடன்பிறப்புகள், என்னை உடன் பிறந்த சகோதரர் போல மதித்து வரவேற்பு அளித்து வருகின்றனர். ஸ்டாலின் என்ன கட்டளையிடுகிறாரோ அதன்படிதான் நடப்பேன். நான் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., வில் இணைந்துள்ளேன். அவர் போட்டோவை வைப்பது தவறு இல்லை. எத்தனை கூட்டம் நடத்தினாலும் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி படுதோல்வி அடையும். மதுரை அ.தி.மு.க., கூட்ட மேடையில் ஈ.வெ.ரா., படத்தை அகற்றியுள்ளனர். ஏழை மக்கள் சம நோக்குடன் வாழ வேண்டும் என்று வாழ்ந்தவர் படத்தை எடுத்தது கண்டனத்துக்குரியது என்றார். முதல்வர் ஸ்டாலினின் பெயரை குறிப்பிடாமல் வார்த்தைக்கு வார்த்தை 'தளபதி, தளபதி...' என்றே குறிப்பிட்டார்.

இரட்டை இலை அகற்றம்

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் பன்னீர்செல்வம் வசிக்கிறார். வீட்டின் கதவில் இரட்டை இலை சின்னம் இருபுறமும், சுவரில் அ.தி.மு.க., கொடியின் வண்ணமும் தீட்டியிருந்தார். பிப்.,27ல் தி.மு.க.,வில் இணைந்ததை அடுத்து அவர் வீட்டுக் கதவில் இருந்த இரட்டை இலை சின்னம் வெல்டிங் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. சுவரில் தி.மு.க., கொடியின் வண்ணம் பூசப்பட்டது. கதவில் உதய சூரியன் சின்னம் பொருத்தப்பட உள்ளது. வீட்டில் நிறுத்தப் பட்டிருந்த கார்களில் அ.தி.மு.க., கொடி அகற்றப்பட்டு தி.மு.க., கொடி பொருத்தப்பட்டது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !