தி.மு.க., மாநாட்டில் முருகன் படம் வைப்பார்களா: பா.ஜ., தமிழிசை கேள்வி
அவனியாபுரம்: தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளின் மாநாட்டில் முருகன், மீனாட்சி அம்மன் படம் வைப்பார்களா'' என பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பினார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: மீனாட்சி நிலத்தில் பிரதமர் மோடி கால் வைப்பது மிக்க மகிழ்ச்சி.
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக மாநாட்டை நடத்துகிறோம். அதில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு இந்த கூட்டம் ஒரு அச்சாரம். நேற்று பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தபோது முதல்வர் ஸ்டாலின், சென்னையில்தான் இருந்தார். பிரதமரை முதல்வர் வரவேற்பதில் என்ன பிரச்னை உள்ளது. பிரதமர் அரசியல்வாதியாக வரவில்லை. தமிழகத்திற்கு ரூ. 7000 கோடிக்கு மேல் நல்ல திட்டங்களை சமர்ப்பிப்பதற்கு வருகிறார்.
தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொடுக்கவில்லை எனக் கூறும் முதல்வர் ஸ்டாலின், இன்று திட்டங்களை தமிழக மக்களுக்கு கொடுக்க வரும்போது வரவேற்கவில்லை.
தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோடு இருப்பது ஒழிய வேண்டும் என்பது எனது வேண்டுகோள். பொதுக் கூட்ட நுழைவாயிலில் ஈ.வெ.ரா. படம் அகற்றப்பட்டதாக சிலர் ஆதங்கப்படுகின்றனர்.
பொதுக் கூட்ட மேடையில் எந்த படம் இருக்க வேண்டும் என்பது மாநாடு நடத்துபவர்களின் உரிமை. தி.மு.க., கூட்டங்களில், மாநாடுகளில் முருகன் படம் வைப்பார்களா.
மதுரையில் தி.மு.க., மாநாடு நடத்தினால் மீனாட்சி அம்மன் படம் வைக்க முடியுமா. அவரவர் கொள்கையின்படி, மாநாட்டில் என்ன படம் வைக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதை வைக்கிறார்கள் என்றார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்