/ செய்திகள் / பகுதிநேர ஆசிரியர்கள் கேட்டது பணி நிரந்தரம்; கிடைத்தது தேர்தல் பணியில் முன்னுரிமை

பகுதிநேர ஆசிரியர்கள் கேட்டது பணி நிரந்தரம்; கிடைத்தது தேர்தல் பணியில் முன்னுரிமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நமது நிருபர் -பணி நிரந்தரம் கேட்டு, 15 ஆண்டுகளாக போராடிவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, தற்போது தேர்தல் பணியில் முன்னுரிமை வழங்கப்பட்டுள் ளது. இதனால், பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில், 16,500 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த 2012ல் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு, வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளை பகுதிநேர ஆசிரியர்களாகவே கடந்து வந்துள்ள இவர்கள், தங்களை முழு நேர ஆசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு இதுவரை கல்வித்துறை அதிகாரிகளும், தமிழக அரசும் செவி சாய்க்கவில்லை.இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதில், பகுதிநேர ஆசிரியர்கள் பெரும்பாலானோருக்கு, 'பி1' என, பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் போது 'பி2' அல்லது 'பி3' நிலையில் அமர்த்தப்பட்டிருந்தனர். நிரந்தர ஆசிரியர்கள் அல்லது அரசு ஊழியர்கள் மட்டுமே, இதுவரை, 'பி1' நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது பகுதிநேர ஆசிரியர்கள் பெரும்பாலானோருக்கு, 'பி1' நிலை தேர்தல் அலுவலராக பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும்,பகுதிநேர ஆசிரியர்களுக்கு, இதுவரையில் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர எந்தவித சிறப்பு சலுகையும் கிடையாது. மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு என, எந்தவிடுப்பும் கிடையாது. மாதத்தில் 12 அரை நாட்கள் கட்டாயம் பணி செய்ய வேண்டும். இதில் பணி நாட்கள் குறைந்தால், அதற்கேற்ப சம்பளம் பிடித்தம் செய்யப்படும். பண்டிகை முன்பணம் கிடையாது, தீபாவளி போனஸ் கிடையாது. இதுவரையில் மே மாதத்திற்கு சம்பளமும் வழங்கப்பட்டது இல்லை. பெயரளவில் அரசு பணியில் உள்ளோம் என்பதால், இந்த பணியை விட்டு செல்லவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவிக்கும், பகுதிநேர ஆசிரியர்கள், 'நாங்கள் கேட்ட நிரந்தர பணியை வழங்காத அதிகாரிகள், தற்போது தேர்தல் பணியில் மட்டும் எங்களை முன்னிலை படுத்தியுள்ளது எங்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தாது' என, புலம்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !