Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


'காமெடி' கட்சிகள் அரங்கேற்றும் ‛காமெடி' காட்சிகள்!

'காமெடி' கட்சிகள் அரங்கேற்றும் ‛காமெடி' காட்சிகள்!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது சிறப்பு நிருபர்

தமிழகத்தில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலின் போதும் புற்றீசல் போல சில கட்சிகள் தோன்றுவது வழக்கம் தான். ஆனால் வரும் தேர்தலில், சீரியசான சினிமாவில் ‛காமெடி' காட்சிகள் கொஞ்சம் துாக்கலாக இருக்கிறதோ என தோன்றுகிறது.
‛‛எ.செ.பு.மு.க.,'' - அதாவது ‛‛என்ன செய்வதென்றே புரியாமல் முழிக்கும் கழகங்கள்'' இவை.
திமுக கூட்டணியிலும் சேர முடியாமல் அதிமுகவிடமும் அடைக்கலாம் ஆக முடியாமல் குறுக்க மறுக்க இவை ஓடிக்கொண்டு இருக்கின்றன. யார் கண்ணிலாவது பட்டு, தொகுதியோ பெட்டியோ கிடைக்காதா என இவை ஏங்குகின்றன.
சில நாட்களுக்கு முன், தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும் மாஜி அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன், திடீரென என்ன நினைத்தாரோ, ‛‛எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்'' என்று ஒரு கட்சியை துவக்கினார்.
இக்கட்சியில் யாரெல்லாம் நிர்வாகிகள் என்று யாருக்கும் தெரியாது. இரண்டு நாட்களுக்கு முன்பு ‛‛எம்ஜிஆர் அதிமுக''வில் இருந்து அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித்குமார் என்பவர் ராஜினாமா செய்தார். ‛‛பண்ருட்டி கட்சிக்கு ஒரு பொதுச்செயலாளர் இருந்தார்'' என்பதே பலருக்கும் அதன் பிறகு தான் தெரிந்தது.

சரி! அது போகட்டும் என்று பார்த்தால், காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று கூறிக்கொண்ட சில கட்சிகள் (?) ஒன்று சேர்ந்திருக்கின்றன. அவை:

1. காமராஜர் தொண்டர்கள் முன்னணி

2. ஜெபமணி ஜனதா மக்கள் நல்வாழ்வு
கட்சி

3. மக்கள் நல்லாட்சி இயக்கம்

ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்து மக்கள் நல கூட்டணியை உருவாக்கி, தனி அணி(?)யாக போட்டியிடுகின்றனவாம். ‛‛இவ்வளவு நாள் நீங்கள்லாம் எங்கப்பா இருந்தீங்க'' என்று வாய் பிளக்கிறார்கள் தமிழக வாக்காளர்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ‛‛பிரேக்கிங் நியூஸ்''. தமிழகமே வெலவெலத்துப் போனது. ‛‛அதிமுக கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம்'' சேர்ந்துள்ளது. அக்கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தான் அந்த ‛‛பிரேக்கிங்''. இதைக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டார்கள் பல ‛‛சிங்கத் தமிழர்கள்''.

இந்த காமெடிகள் முடிந்த பிறகு கொஞ்சம் ஆசுவாசப்படுத்தலாம் என்று நினைத்தால் இன்னொரு அதிர்ச்சி தகவல். தாமரை சின்னத்தில் போட்டியிடுவதைக் கண்டித்து ‛‛தமிழ் மாநில காங்கிரஸ்''-ல் இருந்து 2 நிர்வாகிகள் ராஜினாமா'' என்பது தான் அந்த தகவல். 2 நிர்வாகிகள் அங்கு இருந்தார்களா என்பது இன்னொரு ஆச்சரியம்.

‛‛தியாக தலைவி'' சசிகலா சும்மா இருக்கிறாரா. அவரும் தன் பங்குக்கு ‛‛அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்'' அதாவது, ‛‛அ.பு.த.ம.மு.க.,'' என்ற இந்த கட்சியின் பெயரை சொல்வதற்குள் மூச்சு வாங்குது. இவரும் ஏற்கனவே இந்த பெயரில் இருந்த ஒரு கட்சியை ‛வாங்கி' தன் பெயருக்கு 'பட்டா' போட்டுக்கொண்டு, பாமக ராமதாசுடன் கூட்டணி வைத்துள்ளாராம்.
அதன் பிறகு இக்கூட்டணியின் தொகுதி பங்கீடு போன்ற விஷயங்கள் எதுவும் வெளியே வரவில்லை. இப்படி ஏகப்பட்ட ‛காமெடி' காட்சிகளுடன் தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் போகிறது. இன்னும் என்னென்ன ‛காமெடி' எல்லாம் நடக்கப் போகிறதோ என்று தமிழக வாக்காளர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.

Advertisement