- நமது நிருபர் - தி.மு.க., தலைமை மீதான அதிருப்தி காரணமாக, 20க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், கட்சி தாவ முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலில், 164 வேட்பாளர்களை தி.மு.க., களமிறக்கியது. அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கயல்விழி உள்ளிட்ட பலருக்கும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் அமைச்சர் மனோ தங்கராஜ், த.வெ.க.,விற்கு தாவ முடிவெடுத்து, அக்கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவுடன் பேச்சு நடத்தினார். அதையறிந்த தி.மு.க., தலைமை, மனோ தங்கராஜை சமாதானம் செய்து அவரை தக்கவைத்தது. இருப்பினும் தேர்தல் முடிவு வெளியான பின், கட்சியில் தனது மாவட்டச் செயலர் பதவியும் பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மனோ தங்கராஜ் கருதுகிறார். எனவே, மீண்டும் த.வெ.க.,வுடன் பேச்சு நடத்தி வருகிறார். ஏற்கனவே, சென்னை தி.நகர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, இந்த தேர்தலிலும் 'சீட்' கிடைக்காத அதிருப்தியில், கட்சி பதவியை ராஜினாமா செய்து விட்டார். தனது மகள் மோனிஷாவை, த.வெ.க.,வில் இணைத்து விட்டார். அதேபோல், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான கே.பி.சங்கர், தனது தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு ஒதுக்கியதை விரும்பவில்லை. தனது அதிருப்தியை துணை முதல்வர் உதயநிதியிடமே சொல்லி விட்டார். 'என்னை உருவாக்கிய தி.மு.க.,விற்காக, இந்த தேர்தலில் வேலை செய்வேன். அதன்பின், நிச்சயம் இந்த கட்சியில் இருக்க மாட்டேன்' என, தன் ஆதரவாளர்களிடம் கூறி உள்ளார். மறைந்த தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனின் பேரனான வெற்றியழகன், ஏற்கனவே கட்சியின் மீது அதிருப்தியில் இருந்ததால்தான், மீண்டும் வில்லிவாக்கத்தில் போட்டியிட, விருப்பமனு கூட வாங்கவில்லை; தேர்தல் பணிகளிலும் ஈடுபடவில்லை. அம்பத்துார் எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டி, நாமக்கல் பெ.ராமலிங்கம், லால்குடியில் தொடர்ந்து மூன்று முறை வென்ற சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட பலரும், தங்களுக்கு மீண்டும் 'சீட்' கிடைக்காத விரக்தியில் உள்ளனர். அதேபோல், தி.மு.க.,வின் தென்காசி தெற்கு மாவட்டச் செயலராக இருந்த சிவ பத்மநாதன், மீண்டும் மா.செ., பதவி கிடைக்கும் என்றும், ஆலங்குளத்தில் 'சீட்' கிடைக்கும் என்றும் நம்பினார். ஆனால், இரண்டுமே நடக்காததால், இனியும் எதுவும் கிடைக்காது என்ற மனநிலைக்கு வந்துவிட்டார். அவரை போலவே, தி.மு.க.,வில் பேரூர், நகர, ஒன்றிய செயலராக இருக்கும் பலரும், இம்முறை எம்.எல்.ஏ., சீட்டை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், 'பசை' உள்ள புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்த தலைமை, கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த பலரையும் கண்டுகொள்ளவில்லை. எனவே, தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்து, கட்சி தாவுவது என முக்கிய புள்ளிகள் பலரும் முடிவெடுத்துள்ளனர். இப்படி, 20க்கும் மேற்பட்டோர் புதிய கட்சியின் கரைவேட்டியை கட்ட தயாராக இருக்கும் தகவல், கொடைக்கானலில் ஓய்வில் உள்ள முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லப்பட்டிருக்கிறது. இதைக் கேட்டு அதிர்ந்து போன அவர், 'அதிருப்தியாளர்களிடம் உடனே பேசுங்கள்' என, அமைச்சர்கள் உட்பட மூத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பேச்சு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், பயன் இல்லாத சூழலே நிலவுகிறது. ஒருவேளை, தேர்தல் முடிவு தி.மு.க.,விற்கு சாதகமாக இல்லை என்றால், கட்சி தாவ தயாராக இருப்பவர்களின் பட்டியல், இன்னும் நீளும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.