/ செய்திகள் / வி.சி.க., - காங்., மோதல்; திருமா டென்ஷன்

வி.சி.க., - காங்., மோதல்; திருமா டென்ஷன்

தே.மு.தி.க.,வை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியுடனும், வி.சி.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற திருமாவளவன் அறிவுறுத்தி உள்ளார். கடலுார் பொதுக்கூட்டத்தில், வி.சி.க., தலைவர் திருமாவளவன், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை, மேடையில் அறிமுகப்படுத்தினார். தே.மு.தி.க., பொதுச்செயலரும், விருத்தாசலம் தொகுதி வேட்பாளருமான பிரேமலதா பெயரை சொன்னபோது, அவர் எழுந்து நிற்கவில்லை. இது, வி.சி.க.,வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு பிரசாரத்தில் ஈடுபட்டார். பாவக்கல் அம்பேத்கர் நகரில், அவர் பிரசாரம் செய்யாததால் வாகனத்தை மறித்து, வி.சி.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கபாலு சமாதானப்படுத்தியும் கேட்காத வி.சி.க.,வினர், தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் போக்கை கடைப்பிடித்தனர். இந்த தகவல் தெரியவந்ததும், அவர்களை திருமாவளவன் கண்டித்ததுடன், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து, வி.சி.க.,வினர் கூறியதாவது: கூட்டணி கட்சிகளுடன் முரண்பாடு இருந்தால், பேசி தீர்வு காண வேண்டும். பொதுவெளியில், கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும் வகையில், வி.சி.க.,வினர் செயல்படக் கூடாது என, திருமாவளவன் அறிவுறுத்தி உள்ளார். அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் அதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !