சென்னை: தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததுடன், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளதால், அ.தி.மு.க.,வின் எதிர்காலம் என்னாகுமோ என்ற கவலை, அக்கட்சி தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., 1977ல் ஆட்சியை பிடித்தார். அதைத்தொடர்ந்து, 1980, 1984, 1991, 2001, 2011, 2016 ஆகிய ஏழு தேர்தல்களில், அ.தி.மு.க., வென்றது. கடந்த அரை நுாற்றாண்டு தேர்தல் வரலாற்றில், தொடர்ந்து இரு தேர்தல்களில் அ.தி.மு.க., தோற்றதில்லை. ஆனால், முதல் முறையாக தொடர்ந்து இரண்டாவது முறையாக, இத்தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்துள்ளது. அது மட்டுமல்லாது, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. முதல்வராக விஜய், எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி இருக்க, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்த பழனிசாமி, சாதாரண கட்சி தலைவராக, சட்டசபையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே சென்னை போன்ற பெரிய நகரங்களில் தி.மு.க., வென்றாலும், தென்மாவட்டங்கள், கொங்கு மண்டலம், மத்திய மண்டலங்களில், அ.தி.மு.க., அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. முக்குலத்தோர், முத்தரையர், பட்டியலின சமூகங்கள், அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாக இருந்தன. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பின், எந்த தேர்தலிலும் அ.தி.மு.க.,வால் வெல்ல முடியவில்லை. இத்தேர்தலில், 100 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 1967 வரை தமிழக அரசியல் களம், 'காங்கிரஸ் எதிர் தி.மு.க.,' என்று இருந்தது. 1977ல் அ.தி.மு.க., ஆட்சியை பிடித்ததும் தமிழக அரசியல் களம், 'தி.மு.க., எதிர் அ.தி.மு.க.,' என்று மாறியது. அதன்பின், காங்கிரஸ் கட்சி மூன்றாம், நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இப்போது, த.வெ.க., ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் பிரசாரத்தில் விஜய் கூறியது போல, தமிழக அரசியல் களம், 'தி.மு.க., எதிர் த.வெ.க.,' என, மாறி விடுமோ என்ற அச்சம், அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது. த.வெ.க.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அ.தி.மு.க.,வின், 47 எம்.எல்.ஏ.,க்களை தக்க வைப்பது பழனிசாமிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், அ.தி.மு.க.,வின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலை, அக்கட்சி தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது.