தி.மு.க., பொய் பிரசாரம்; அ.ம.மு.க., தினகரன் புகார்
கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜக்கையனை ஆதரித்து, கம்பத்தில் நேற்று அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: மத்தியில் ஆளும் பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்றும், பிரதமர் மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்றும், தி.மு.க., பொய் பிரசாரம் செய்து வருகிறது. இப்படி மாய பிம்பங்களை உருவாக்கியே, கடந்த மூன்று தேர்தல்களில் தி.மு.க., வெற்றி பெற்றது. முஸ்லிம் நாடான ஈரான், இந்தியாவை நட்பு நாடு என்று நேசக்கரம் நீட்டுகிறது. முஸ்லிம்களுக்கு பா.ஜ., எதிரி என்றால், ஈரான் நட்பு கரம் நீட்டுவது சாத்தியப்படுமா? முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெரும் சட்டப் போராட்டம் நடத்தி அனுமதி பெற்றார். ஆனால், கேரளாவிற்கு அழுத்தம் கொடுத்தால், இங்கு கூட்டணி ஆட்டம் கண்டு விடும் என்பதால், முல்லை பெரியாறு பிரச்னையை தி.மு.க., கண்டுகொள்வதில்லை. நானும், பழனிசாமியும் திட்டிக் கொண்டோம் என்கின்றனர். வீடு என்று இருந்தால் அண்ணன், தம்பிக்குள் சண்டை வருவது சகஜம் தானே. இப்போது நாங்கள் ஒன்று சேர்ந்து விட்டோம். இவ்வாறு தினகரன் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am