குடி போதையில் இருப்பவர்களால் நல்ல தலைவரை தேர்வு செய்ய முடியாது: சீமான் சீற்றம்
திருவாரூர்: ''குடி போதையில் இருப்பவர்களால், நல்ல தலைவரை தேர்வு செய்ய முடியாது,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக பேசினார்.
திருவாரூரில் நேற்று பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
விவசாயிகள் விளைவித்த நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைக்க, குடோன் கட்ட வக்கற்ற தி.மு.க., அரசுக்கா ஓட்டு போட போகிறீர்கள்? குடிக்கும் மக்களை பெருக்கி, குட்டிச்சுவர் ஆக்குபவர்களுக்கு, மறுபடியும் ஓட்டு போட போகிறீர்களா?
ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவேன் என யாராவது வாக்குறுதி அளிப்பரா? குடிக்கும் மக்கள் இரண்டரை கோடி பேர் இருப்பதால், அவர்களது ஓட்டுகளை பெறவே, டாஸ்மாக் பற்றி யாரும் பேசுவதில்லை.
எனக்கு, குடிக்கும் மக்களின் ஓட்டுகள் தேவையில்லை; நல்ல குடிமக்களின் ஓட்டுகள் மட்டும் போதும். போதையில் இருப்பவனால், நல்ல தலைவனை தேர்வு செய்ய முடியாது.
மதுவால் தான், குழந்தை பிறப்பு விகிதமும் குறைந்து விட்டது. குடிக்க வைத்து, பெண்களின் தாலியை அறுத்தவர்களையா தேர்வு செய்யப் போகிறீர்கள்?
இவ்வாறு சீமான் பேசினார்.
இதுபோல, நாகப்பட்டினம் தொகுதியில் சீமான் பேசியதாவது:
தமிழகத்தில் பா.ஜ., வந்து விடும் என்பதால், காங்கிரசுடன் கூட்டணி வைத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
அந்த இரு கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை ஸ்டாலினால் விளக்க முடியுமா? மசூதியை இடித்தது ஆர்.எஸ்.எஸ்., என்றால், இடிக்க அனுமதித்தது காங்கிரஸ். இரு கட்சிகளுமே மாநில உரிமைகளை பறிப்பவை; தேசிய இனங்களை ஒடுக்கும் கொள்கை கொண்டவை.
தமிழக கடல் பகுதியில் 800க்கும் மேற்பட்ட மீனவர்கள், இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஆனால், கேரள மீனவர்கள் எல்லை தாண்டி சென்றாலும் தாக்கப்படுவது இல்லை. ஏனென்றால், அம்மாநில அரசால் மீனவர்களுக்கு பாதுகாப்பு உண்டு; தமிழகத்தில் இல்லை.
தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. தன் தவறுகளை மறைக்க, தி.மு.க., அரசு 8,000 ரூபாய் கூப்பன் என்கிறது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் 10,000 ரூபாய் தருவதாக அறிவிக்கிறது. ஆனால், நாம் தமிழர் கட்சி எதையும் இலவசமாக கொடுக்காது.
இவ்வாறு சீமான் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்