/ செய்திகள் / அனுபவம் இல்லாமல் த.வெ.க., தடுமாற்றம்!
அனுபவம் இல்லாமல் த.வெ.க., தடுமாற்றம்!
- நமது நிருபர் - கூட்டணி அமைப்பதில் முன் அனுபவம் இல்லாததாலும், ஆட்சி அமைப்பதற்கு பின்பற்ற வேண்டிய சட்ட விதிமுறைகள் குறித்த விபரங்களை அறியாததாலும், த.வெ.க., ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறி வருகிறது.
அவசரம்:
தேர்தல் கமிஷனருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை, உள்ளாட்சி தேர்தலை நடத்தும், மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது; உள்துறை செயலருக்கு பதில், மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதியது என, ஏகப்பட்ட குளறுபடிகள் தேர்தலுக்கு முன் நிகழ்ந்தன. தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பின், பிரசார கூட்டத்துக்கு அனுமதி வாங்குவதில் குளறுபடி ஏற்பட்டது. இப்படி தொடக்கத்தில் இருந்தே, பல குளறுபடிகள் நடந்ததை, தலைமை கவனத்தில் கொள்ளாததால், இன்று வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறி வருகிறது. சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்று, அதிக தொகுதிகளை பெற்ற கட்சியாக, த.வெ.க., உள்ளது. இதை வைத்தே, கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். அதை முறையாக செய்யவில்லை. முதலில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை, கவர்னர் மாளிகைக்கு நள்ளிரவில் எடுத்து சென்றனர். அங்குள்ள அதிகாரிகள் இவ்வாறு வரக்கூடாது என்று தெரிவித்ததுடன், ஆட்சி அமைக்க கோருவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்துள்ளார். அதையும் முறையாக பின்பற்றவில்லை. கவர்னரை சந்திக்க சென்ற விஜய், பூங்கொத்து எதையும் எடுத்துச் செல்லவில்லை. ஆனால், கவர்னர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன், நினைவுப்பரிசு வழங்கினார். கவர்னரை சந்திக்க செல்லும் போது, என்ன செய்ய வேண்டும் என்பதை கூட அறிந்து கொள்ளவில்லை. அதேபோல், அதிக இடங்களை பெற்றதால், தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கோருவதற்கு பதிலாக, அவசரப்பட்டு காங்கிரசின் ஆதரவை பெற்று, கூட்டணி ஆட்சி அமைக்க, உரிமை கோரப்பட்டு விட்டது. இதனால், பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.திணரும் தலைமை:
அதேபோல, ஆட்சி அமைக்க, பிற கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் விஷயத்திலும், கட்சி தலைமை கோட்டை விட்டது. தேர்தலுக்கு பின், கூட்டணி அமைக்க முடிவெடுத்தால், அதற்கு அனுபவமிக்க நிர்வாகிகள் குழுவை நியமித்திருக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்.எல்.ஏ., - ஜே.சி.டி.பிரபாகர் என, அனுபவம் வாய்ந்தவர்கள் கட்சியில் இருந்தும், அவர்களின் பேச்சை விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி கேட்கவில்லை. வி.சி., - கம்யூ., கட்சிகளிடம், கூட்டணி குறித்து பேச, பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில் சீனியர்கள் அடங்கிய குழுவை அமைத்திருந்தால், ஏற இறங்க பேசி, கூட்டணி அமைத்திருக்க முடியும். ஆனால், ஜானோ, அரசியல் அனுபவம் இல்லாத, தன் நண்பர்களை வைத்து, கூட்டணி கட்சிகளை அணுகி உள்ளார். ஏற்கனவே வேறு திட்டத்தில் இருக்கும், விசி., - கம்யூ., கட்சிகளுக்கு, இது எரிச்சலை தந்துவிட்டது. எனவே தான், விஜயை நேரடியாக பேச சொல்லுங்கள், எனக்கூறி, கூட்டணிக்கு வர விரும்பிய கட்சிகளும் அமைதியாகி விட்டன. த.வெ.க., இடத்தில், தி.மு.க.,வோ அ.தி.மு.க.,வோ இருந்திருந்தால், இந்நேரம் பதவி ஏற்பு விழாவே நடத்தி இருப்பர். ஆனால், முன் அனுபவம் இல்லாமல், இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றும், எதுவுமே செய்யமுடியாமல் த.வெ.க., தடுமாறிக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am