என்னுடன் நடை போட்டிக்கு தயாரா? பழனிசாமிக்கு துரைமுருகன் சவால்
காட்பாடி : ''என் வயது முதிர்வு குறித்து விமர்சித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, என்னுடன் நடை போட்டிக்கு வர தயாரா?'' என அமைச்சர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில் தி.மு.க., சார்பில் அமைச்சர் துரைமுருகன் 11வது முறையாக போட்டியிடுகிறார். அவர், நேற்று தன் மகன் கதிர் ஆனந்த் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின், துரைமுருகன் அளித்த பேட்டி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'அமைச்சர் துரைமுருகனுக்கு வயதாகி விட்டது; அவரால் நடக்கவே முடியவில்லை. அதிக முறை வென்றவர் என்ற பெருமைக்காக துரைமுருகன் போட்டியிடுகிறார்; ஒவ்வொரு முறையும் இது தான் என் கடைசி தேர்தல் என்கிறார்' என, என்னை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
பழனிசாமி வழக்கமாக பேசும் பொய்களில் இதுவும் ஒன்று. வேண்டுமானால் பழனிசாமியை என்னோடு நடை போட்டிக்கு வரச் சொல்லுங்கள் பார்ப்போம்; எனக்கு மக்களின் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை நீங்களே வந்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்