மா.செ.,க்களை மாற்ற வேண்டாம்: தி.மு.க., தலைமைக்கு நுாதன கோரிக்கை
- நமது நிருபர் -
'மாவட்ட செயலர்களை மாற்ற வேண்டாம்' என, தி.மு.க., தலைமைக்கு, அக்கட்சியின் நிர்வாகிகள், நுாதன கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர்.
ஆளும் கட்சியாக தேர்தலை சந்தித்த தி.மு.க., வெறும் 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது; முதல்வராக இருந்த ஸ்டாலின், அவரது கொளத்துார் தொகுதியிலேயே தோல்வியடைந்தார்.
தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், இ.கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட் ஆகியவை, வெளியேறிவிட்டன. புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., பக்கம் அக்கட்சிகள் சென்றதால், தனித்து விடப்பட்ட நிலையில், தி.மு.க., இருக்கிறது.
இந்நிலையில், தோல்வி குறித்து, தி.மு.க.,வினர், தங்கள் கருத்துகளை, 'உடன்பிறப்பின் குரல்' என்ற இணையதள பக்கம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தேர்தலில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் 30க்கும் மேற்பட்டோர் தோல்வி அடைந்துள்ளனர்; அவர்களில், 10 அமைச்சர்களும் அடக்கம்.
கடந்த ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில், மா.செ.,க்களும், அமைச்சர்களும் தான் செழிப்பாக இருந்தனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றிருந்தாலே, 90 சீட்களுக்கு மேல் தி.மு.க.,வுக்கு கிடைத்திருக்கும்.
ஆனால், தி.மு.க.,வில் அமைச்சர்களாக இருந்தவர்களில் 16 பேர் தோற்று விட்டனர். ஒவ்வொரு மாவட்ட செயலரும், தங்கள் வளர்ச்சியில், ஒரு துளியை கூட தேர்தலுக்கு செலவு செய்யவில்லை. வேட்பாளருக்காக தலைமையில் இருந்து வந்த பணத்தையும், மாவட்ட செயலர்கள் அமுக்கி விட்டனர்.
இந்நிலையில், தொகுதிகளை கோட்டை விட்ட, மாவட்ட செயலர்களை மாற்ற, தலைமை முடிவெடுத்து இருப்பது தவறானது. ஆளுங்கட்சியாக இருந்தபோது, கணக்கிட முடியாத அளவுக்கு வந்த வருமானத்தை, இன்னும் அவர்கள் வைத்திருக்கின்றனர். கட்சி வாயிலாக வந்ததை, கட்சிக்காக, அவர்களை செலவு செய்ய வைக்க வேண்டும்.
அதைவிட்டுவிட்டு, நடவடிக்கை என்ற பெயரில், செழிப்பான மாவட்ட செயலர்களை மாற்றி விட்டு, புது ஆட்களை கொண்டு வந்து, அவர்களை செலவு செய்ய வைத்து, கட்சியை வளர்க்க முடியாது. எனவே, தேர்தலில் வேலை செய்யாத, செலவு செய்யாத மா.செ,.க்களை, செலவு செய்ய வைத்த பின், புது ஆட்களை நியமிக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கட்சி தலைமைக்கு கடிதம் வழியாகவும், 'உடன்பிறப்பின் குரல்' இணையதளம் வழியாகவும் கட்சியினர் அனுப்பி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

ஆமாம் ஆமாம் பழைய களவாணிகளை மாத்தினால் எதிராளியிடம் காட்டி கொடுத்து மாட்டி விடுவார்கள். மேலும் சிக்கலாகி விடும்.