உதவி வேளாண் அலுவலர், அரசு கண்டக்டர் தி.மு.க., நேர்காணலில் பங்கேற்றதால் சர்ச்சை
ஆத்துார்: உதவி வேளாண் அலுவலர், அரசு பஸ் கண்டக்டர் ஆகியோர் ஆத்துார் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்து, நேர்காணலில் பங்கேற்ற புகைப்படங்கள் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் லலிதாபிரதிபா, 45; மல்லியக்கரையில் உதவி வேளாண் அலுவலராக பணிபுரிகிறார். ஆத்துார் அருகே புங்கவாடியை சேர்ந்தவர் ராஜவேல், 50; வாழப்பாடி அரசு போக்குவரத்து கிளை பணிமனை கண்டக்டர்.
இவர்கள், ஆத்துார் - தனி, தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். நேற்று முன்தினம் சென்னையில் உள்ள, அக்கட்சி அலுவலகத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்த நேர்காணலில் பங்கேற்றனர். அரசு ஊழியராக இருந்து கொண்டு, இருவரும் நேர்காணலில் பங்கேற்ற புகைப்படம், நேற்று பரவியது.
சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் கூறுகையில், ''லலிதாபிரதிபா, ஒன்றரை மாதம் விடுமுறையில் உள்ளார். இருப்பினும், அரசு பணியில் உள்ள நிலையில், கட்சி சார்பில் விருப்ப மனு அளித்த தகவல் குறித்து, ஆத்துார் வேளாண் உதவி இயக்குநரிடம் அறிக்கை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
அதேபோல், வாழப்பாடி அரசு போக்குவரத்து கிளை பணிமனை அலுவலர் ராஜா கூறுகையில், ''கண்டக்டர் ராஜவேல் நேர்காணலில் பங்கேற்றது குறித்து விசாரித்து, உயர் அதிகாரிக்கு தகவல் அளிக்கப்படும்,'' என்றார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்