மாநிலத்தில் அவிநாசி முன்மாதிரி தொகுதியாகும்; பா.ஜ. வேட்பாளர் முருகன் பிரத்யேகப் பேட்டி
- நமது நிருபர் -
'அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒட்டுமொத்த மாவட்டத்தின் வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும்'' என, அவிநாசி (தனி) தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில், 'ஸ்டார்' அந்தஸ்து தொகுதியாக அவிநாசி தொகுதி மாறியிருக்கிறது. காரணம், மத்திய இணை அமைச்சர் முருகன், அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ. சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் என்பது தான். தொகுதிக்குள் செய்து வரும் பிரசாரம், வாக்காளர்களிடம் வரவேற்பு, வாக்குறுதிகள் குறித்து, நம் நாளிதழுக்கு முருகன் அளித்த பிரத்யேகப் பேட்டி:
* அவிநாசி தொகுதியில் தென்படும் பிரதான பிரச்னைகளாக நீங்கள் அறிந்துகொண்டது என்ன?
எல்.முருகன்: அவிநாசி, நகராட்சி அந்தஸ்து பெற்றும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, முறையாக அகற்ற கட்டமைப்பு இல்லை. நான் வெற்றி பெற்று, அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது, பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும் என்பது என் இலக்கு. அன்னுாரில் போக்குவரத்து நெரிசல் சவால் நிறைந்ததாக இருக்கிறது. ஏற்கனவே, மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னுார் வழியாக சத்தியமங்கலம் வரை, நான்கு வழிச்சாலை பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்பணி நிறைவு பெற்றவுடன், அன்னுாரை மையப்படுத்தி, புறவழிச்சாலை அமைத்து, நெரிசலுக்கு தீர்வு காணப்படும்.
* நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அவிநாசியில், அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சை இல்லை என்ற குறை நிலவுகிறதே?
எல்.முருகன்: நான் வெற்றி பெற்றவுடன் அவிநாசியிலுள்ள அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை அரங்கு மேம்பாடு, 24 மணி நேர விபத்து சிகிச்சை மையம், கூடுதல் மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். ஒன்றிய பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, கூடுதல் எண்ணிக்கையில், புதிதாக சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கிராமங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் வீடு, பட்டா கேட்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதே!
எல்.முருகன்: உண்மை தான். சிறிய வீட்டில், 3, 4 குடும்பத்தினர் வசதி குறைபாடுடன் வாழ்கின்றனர். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், தமிழகத்தில், 9 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன; இனி, 3 லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான 'சர்வே' உள்ளிட்ட நிர்வாக பணிகளை, மாநில அரசு கிடப்பில் போட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வீடில்லாத மக்களுக்கு வீடு, பட்டா கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். குறிப்பாக, அவிநாசி தொகுதியில், பட்டியல் இன குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கிராமப்புறங்ளில் சில இடங்களில் ரோடு வசதி, பஸ் வசதி இல்லை என்ற குறையும் என் கவனத்துக்கு வந்துள்ளது.
* 'அவிநாசி - அத்திக்கடவு 2.0' திட்டம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறதே!
எல்.முருகன்: இது ஒரு வரலாற்று திட்டம்; அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி தான், அதற்கு முழுமுதல் காரணம். அத்திட்டத்தில் பம்பிங் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளன. பல குளம், குட்டைகளுக்கு நீர் வருவதில்லை. தி.மு.க. அரசு அத்திட்டத்தை கண்டுகொள்ளவும் இல்லை.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது, திட்டத்தில் உள்ள குறைகள் தவிர்க்கப்பட்டு, விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தில், ஆண்டு முழுக்க நீர் கிடைக்கவும், தொகுதி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தியடையும் வகையில், கடந்த, 1965ல் இருந்து, பேசு பொருளாக உள்ள பாண்டியாறு - பவானிசாகர் இணைப்பு திட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும்.
* வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களாக எவற்றைச் செயல்படுத்துவீர்கள்?
எல்.முருகன்: இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த, திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்படும். என் சொந்த ஊரில் 'நமோ கோச்சிங் சென்டர்' என்ற பெயரில், நீட், ஜெ.இ.இ. உட்பட அக்னிவீர், போலீஸ், ரயில்வே உட்பட மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டி தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி அவிநாசி, அன்னுாரிலும் கொண்டு வரப்படும். அவிநாசியில் அரசு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. அன்னுாரில் கலைக்கல்லுாரி உருவாக நடவடிக்கை எடுக்கப்படும்.
* மத்திய அமைச்சர் என்ற முறையில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒட்டுமொத்த மாவட்டம் சார்ந்த வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்களா?
எல்.முருகன்: நிச்சயமாக... ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. என்றல்லாமல், ஒட்டு மொத்த மாவட்டம் மற்றும் மாநிலத்தின் தேவை மற்றும் வளர்ச்சியை பிரதிபலிக்கும் பொறுப்பையும், பிரதமர் மோடி எங்களுக்கு வழங்கியிருக்கிறார்.
'நம் சிந்தனை என்றும் பெரிதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், நான் வெற்றி பெற்று, மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது, மத்தியில் பா.ஜ. ஆட்சி இருக்கும் போது, அவிநாசி தொகுதிக்கு பல 'மெகா' திட்டங்களை செயல்படுத்த உத்தேசித்துள்ளேன்.
சாலை, குடிநீர், உட்கட்டமைப்பு, வேலை வாய்ப்பு, கிராமப்புற வளர்ச்சியில் பா.ஜ. அரசு கவனம் செலுத்துகிறது. அத்திட்டங்கள் தடையின்றி அவிநாசி தொகுதி மட்டுமன்றி, மாநிலம் முழுக்க கிடைப்பதற்கான முயற்சியை மேற்கொள்வேன். குறிப்பாக, அவிநாசி தொகுதியை முழு வளர்ச்சியடைந்ததாக, தமிழகத்திலேயே முன் மாதிரி தொகுதியாக மாற்றுவதே என் லட்சியம்.
* விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்கள் என்னென்ன?
எல்.முருகன்: அன்னுாரில் உள்ள விவசாயிகள், குளிர்பதன கிடங்கு வசதி கேட்டுள்ளனர். அன்னுார், அவிநாசியில் விவசாயிகளை உள்ளடக்கி, அதிகளவில் 'விவசாய உற்பத்தியாளர் சங்கம்' அமைப்பது, விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பது, வாழை உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைக்கவும், சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுப்பேன்.
* கிராமப்புற மேம்பாட்டில் கவனம் செலுத்துவீர்களா?
எல்.முருகன்: அவிநாசி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, சேவூரை தலைமையிடமாக கொண்டு, தனி ஊராட்சி ஒன்றியம் அமைப்பது, சேவூரில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பது, அன்னுார் ஒன்றியத்திலுள்ள மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்துவது, நல்லாறு, நொய்யல் உள்ள நீராதாரங்களை மேம்படுத்துவது, பட்டியலின மக்கள் அதிகளவில் வசிக்கும் கிராமங்களில் சமுதாய நலக்கூடம் அமைப்பது போன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிபபேன்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்