தமிழகம், புதுச்சேரியில் காங். இரட்டை இலக்கங்களில் கூட தொகுதிகளை வெல்ல முடியாது; அமித் ஷா கணிப்பு
கோல்கட்டா: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் இரட்டை இலக்க இடங்களை கூட தாண்டாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் நாளை (ஏப்.23) சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிந்துவிட்ட நிலையில், ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக இறங்கி உள்ளது.
இந் நிலையில் மேற்கு வங்கத்தில் 2ம் கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்க உள்ள தொகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டார். டம்டம் உத்தர் தொகுதியில் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரட்டை இலக்க எண்ணிக்கையை கூட காங்கிரசால் தொட முடியாது என்றார்.
அவர் மேலும் பேசியதாவது;
பல மாநிலங்களில் காங்கிரஸ் மேலும் பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் இரட்டை இலக்கங்களை கூட தாண்டாது என்பதை ராகுலுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அசாமில் வரலாற்றிலேயே மிக பெரும் தோல்வியை காங்கிரசானது சந்திக்கும்.
காங்கிரசுடன் மம்தா வைத்துள்ள தொடர்பு, அவரை அரசியல்ரீதியாக மேலும் பலவீனப்படுத்தும். அவரின் நிலைமை மேலும் மோசம் ஆகும். ராகுலுடன் நெருக்கம் காரணமாக, கார்கேவின் பேச்சு தரம் தாழ்ந்துவிட்டது. பிரதமரை எவ்வளவு தூரம் இழிவுபடுத்தி விமர்சிக்கிறீர்களோ அவ்வளவு தூரம் தாமரை பிரகாசமாக மலரும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்