ஐ.டி., ரெய்டில் செல்வப்பெருந்தகை மீண்டும் நாடகம்!
சென்னை: வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில், தி.மு.க., பிரமுகர் வீட்டில் நடந்த சோதனைக்கான, 'சிசிடிவி' பதிவை வெளியிட்டு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் நாடகமாடி உள்ளார்.
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில், காங்., வேட்பாளராக செல்வப்பெருந்தகை போட்டியிட்டார். வருமான வரித்துறை அதிகாரிகள், தன் வீட்டில் சோதனை நடத்தியதாக, தேர்தல் பிரசாரத்தின்போது செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினார்.
'அவரது வீட்டில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை' என, வருமான வரித்துறை திட்டவட்டமாக மறுத்தது. பொய் சொன்ன செல்வப்பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்குமாறு, போலீஸ் கமிஷனரிடமும், தேர்தல் கமிஷனிடமும் வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது.
இச்சூழலில், 'தேர்தல் முடிந்ததும் சோதனை நடந்ததற்கான ஆதாரத்தை வெளியிடுவேன்' என, ஓட்டுப்பதிவு நாளன்று செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். அதன்படி நேற்று, காங்., தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், 'சிசிடிவி கேமரா' பதிவுகளையும், சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.
அவர் ஆதாரமாக காட்டிய இடம், தி.மு.க., நிர்வாகி படப்பை மனோகரனின் வீடு. அந்த வீட்டில் தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திஉள்ளனர். அதை தன் அலுவலகமாக குறிப்பிட்டு, வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கான ஆதாரமாக செல்வப்பெருந்தகை கூறினார்.
அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பிரசாரம் செய்தபோது, நான் ஸ்ரீபெரும்புதுார் தொகுதி, படப்பையில் உள்ள தி.மு.க., நிர்வாகி மனோகரன் வீட்டில் இருந்தேன். அந்த வீட்டில் உள்ள என் அலுவலகத்தில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தமிழ் பேசத் தெரியாத வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து, 'சிசிடிவி கேமரா'க்களை அணைத்து விட்டு, சோதனை நடத்தினர்; பணம் எங்கே என, கேட்டு சோதனை செய்தனர். அங்கு எதுவும் கிடைக்காததால், கையெழுத்து வாங்கிச் சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்