Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமையுங்கள்: விஜய்க்கு த.வெ.க., நிர்வாகிகள் நெருக்கடி

 அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமையுங்கள்: விஜய்க்கு த.வெ.க., நிர்வாகிகள் நெருக்கடி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது நிருபர் -

'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம்' என, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, அக்கட்சி நிர்வாகிகள் நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: த.வெ.க., துவங்கியபோது இருந்த மவுசு தற்போது இல்லை. விஜயின் குடும்ப பிரச்னை, அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதோடு, தி.மு.க., - அ.தி.மு.க.,வின் பண பலத்துக்கு த.வெ.க.,வால் ஈடுகொடுக்க முடியவில்லை.

தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகளை பிரிக்கும் சக்தியாகவே விஜய் உள்ளார். அதனால்தான், விஜய் யாருடனும் கூட்டணி சேர்ந்து விடக்கூடாது என, தி.மு.க., கடுமையாக வேலை செய்கிறது.

அதேபோல், 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்க, த.வெ.க.,வில் தகுதியான வேட்பாளர்கள் இல்லை என்பதே கள எதார்த்தம். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால், தனது செல்வாக்கு சரிந்து விடும்; சிறுபான்மையினர் ஓட்டும் வராது என, விஜய் நினைக்கிறார்.
ஆனால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, த.வெ.க.,வுக்கு ஓர் வாய்ப்பு உள்ளது. 2024 லோக்சபா தேர்தலின்போதே, கூட்டணிக்காக த.வெ.க.,வுடன் அ.தி.மு.க., பேச்சு நடத்தியது. ஆனால், தேர்தல் முடிந்ததும், அவசர அவசரமாக பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து விட்டார் பழனிசாமி.
களத்தில் இருக்கும் சூழல் குறித்து, பொதுச்செயலர் ஆனந்த் வாயிலாக விஜய்க்கு தெரிவித்தோம். அப்போது, 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்பதில் விஜய்க்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. 'தொகுதி பங்கீடு, கூட்டணிக்கு தலைமை யார் என்பதில், இருவரும் கறாராக இருப்பதால்தான், கூட்டணி கைகூடாமல் உள்ளது' என, ஆனந்த் கூறுகிறார்.

இருவரில் ஒருவர் இறங்கி வந்தால், அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி நிச்சயம் அமைந்து விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோபாலபுரம், போயஸ் கார்டனுக்கு அடுத்து டில்லிக்கு முக்கியத்துவம்


தி.மு.க., தலைவராக கருணாநிதியும், அ.தி.மு.க., பொதுச்செயலராக ஜெயலலிதாவும் இருந்தபோது, சட்டசபை, லோக்சபா தேர்தல்களில், தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். இதற்காக, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த வரும் கட்சிகளின் தலைவர்களை, போயஸ் கார்டன் வீட்டிலேயே ஜெயலலிதா சந்திப்பார்.
இதேபோல், தி.மு.க.,வுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த வரும் கட்சி தலைவர்கள், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில், அவரை சந்தித்து, முடிவை வெளியிடுவர்.

இதனால் ஜெயலலிதா, கருணாநிதி உயிரோடு இருந்த வரை, தமிழகத்தில் எந்த தேர்தல்கள் என்றாலும் கோபாலபுரமும், போயஸ் கார்டனும், டில்லி வரை முக்கியத்துவம் பெற்றன. கடந்த, 2016ல் ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., தலைமைக்கு வந்த பழனிசாமி, 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தலில், கூட்டணி பேச்சை, கிண்டி மற்றும் அடையாறில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தினார்.

அதேபோல, 2026 சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த போதும், கிண்டி நட்சத்திர ஓட்டலில் அமித் ஷாவை சந்தித்து பேசியே, பழனிசாமி கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். அதன் பின், கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக அமித் ஷாவை சந்திக்க அடிக்கடி டில்லி சென்று வருகிறார் பழனிசாமி. இதனால், தமிழக தேர்தலில் முதல் முறையாக போயஸ் கார்டன், கோபாலபுரம், கிண்டி நட்சத்திர ஓட்டலுக்கு அடுத்து, டில்லிக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.



பழனிசாமி மகனை சந்தித்த ஆதவ்!


அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் மகன் மிதுனை, கட்டுமான தொழிலதிபர் ஒருவர் வாயிலாக, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் சந்தித்து பேசி உள்ளார். இதனால்தான், தங்களுடனான தொகுதி பங்கீட்டை, பழனிசாமி தள்ளிப் போடுவதாக பா.ஜ.,விற்கு தெரியவந்துள்ளது. அதை தடுத்து நிறுத்தவே, பழனிசாமிக்கு டில்லி வருமாறு, மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து அழைப்பு வந்ததாக அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement