பதவிக்காக மோடி காலை பிடித்திருக்கிறார்; இபிஎஸ் மீது உதயநிதி கடும் விமர்சனம்
தஞ்சாவூர்: ''பதவிக்காக சசிகலா காலில் விழுந்து, அவரது காலை வாரி விட்ட இபிஎஸ், தற்போது, மோடி காலை பிடித்துக்கொண்டு இருக்கிறார்,” என துணை முதல்வர் உதயநிதி விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் சந்திரசேகரனை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, உதயநிதி பேசியதாவது:
தமிழக வளர்ச்சிக்கு தர வேண்டிய நிதியை, மத்திய பா.ஜ., அரசு, வழங்க மறுத்து வருகிறது. ஆனால், மீண்டும் ஹிந்தி மொழியை திணிக்க முயற்சிக்கிறது. இதற்கு, ஜாடிக்கேத்த மூடி மாதிரி, மோடிக்கேத்த அடிமையாக அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் செயல்படுகிறார்.
பதவிக்காக, யார் காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு கிடையாது, ஆனால், இபிஎஸ் பதவிக்காக, ஜெயலலிதா, சசிகலா, தினகரன், பன்னீர் செல்வம் ஆகியோரது காலில் விழுந்து, அவர்களது காலை வாரி விட்டவர். தற்போது, மோடி காலை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தை ஆள்வதற்கு, இபிஎஸ்ஐ ஒரு ரிமோட்டாக, பா.ஜ., மாற்றி வருகிறது. டில்லி அணிக்கும் தமிழகத்துக்கும் நடைபெறும் இந்த தேர்தலில், நாம் வெற்றி பெற வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தின் எட்டு தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெல்ல வேண்டும்.
இந்த முறை, தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகரன், 60,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், மாதம் ஒருமுறை திருவையாறு வருவேன். ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தால், முதல்வரிடம் சண்டை போட்டு, சந்திரசேகரனை அமைச்சராக்குவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்