போதிய பஸ்கள் இல்லை; ஓட்டு போட முடியாமல் மக்கள் தவிப்பு
சென்னை: ஒரே நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் அதிகம் பேர் நேற்று விடுப்பில் சென்றதால், போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று ஓட்டு போட முடியாமல் பொது மக்கள் திண்டாடினர்.
ஓட்டுப் போடுவதற்கு பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தினமும் இயக்கக் கூடிய 2,092 பஸ்களுடன், 5,574 சிறப்புப் பஸ்கள் என 21, 22, 23ம் தேதிகளில், மொத்தம் 10,663 பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல் நேற்று அதிகாலை 6:00 மணி வரை, 5,00,000க்கும் மேற்பட்டோர் வந்தனர். ஆனால், பயணியர் வருகைக்கு ஏற்ப, சிறப்பு பஸ்கள் போதுமானதாக இல்லை.
இந்நிலையில், ஜனநாயக கடமையாற்ற எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என, பயணியர் விடாமுயற்சி காட்டியதால், கிளாம்பாக்கம் பஸ் முனையம் விடிய விடிய அல்லோகலப்பட்டது.
இரு சக்கர வாகனங்களில், மனைவி, குழந்தைகளோடு ஏராளமானோர் வருகை தந்த நிலையில், 'டூ வீலர் பார்க்கிங்' பகுதி நிரம்பி வழிந்தது.
இதனால், சில ஆயிரம் பேர் தங்கள் டூ வீலர்களை நிறுத்த முடியாத சூழல் நிலவியது. விடிய விடிய காத்திருந்தும் பஸ்கள் கிடைக்காமல், ஆயிரக்கணக்கானோர் ஓட்டளிக்க முடியாத சோகத்துடன், மீண்டும் வீடு திரும்பினர்.
தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா என்பதால், அனைத்து மக்களும் சொந்த ஊர் சென்று, ஓட்டளித்து திரும்புவர். இதை அதிகாரிகள் சரியாக கணித்து, அதற்கேற்ப திட்டமிட்டு, கூடுதல் எண்ணிக்கையில் சிறப்பு பஸ்களை இயக்கியிருக்க வேண்டும்.
ஆனால், போதிய ஏற்பாடுகள் செய்யவில்லை என, பொது மக்கள் புகார் தெரிவித்தனர். வேறு வழி இல்லாமல், சிலர் ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழித்து, ஆம்னி பஸ்களில் பயணம் செய்தனர்.
அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1.19 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். அத்தியாவசிய பணியாக கருத்தில் கொண்டு, போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல் முறையாக, முன் கூட்டியே ஓட்டளிக்கும் விதமாக தபால் ஓட்டு வசதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த வசதி பெற விரும்பிய ஊழியர்கள், கடந்த 17 முதல் 20ம் தேதிக்குள், அவர்களின் தொகுதிகளுக்குச் சென்று ஓட்டளிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு நேரில் சென்று தான், ஓட்டுப் போட வேண்டும் என்பதால், பெரும்பாலான ஊழியர்கள் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஊர்களுக்குச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
மேலும், நேற்று முன்தினம் மாலையில் பணியில் இருக்க வேண்டிய ஓட்டுனர்கள், நடத்துனர்களில், 30 முதல் 40 சதவீதம் பேர் விடுப்பு எடுத்து கொண்டதாக, பணியாற்றிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அரசு பஸ்கள் முழு அளவில் ஓடாமல் இருந்தன. வெளியூர் செல்ல திட்டமிட்ட பொது மக்களில் சிலர் கிளாம்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையங்களில் காத்திருந்து, மீண்டும் வீட்டுக்கே திரும்பியுள்ளனர்.
இதேபோல், சென்னையில் காலை 10:00 மணிக்கு பின், மாநகர பஸ்களின் இயக்கம் குறைக்கப்பட்டதால், பொது மக்கள் அவதி அடைந்தனர்.
இது குறித்து, பஸ்களுக்காக காத்திருந்த பொது மக்கள் கூறியதாவது: தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கு, அந்த மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே சொந்த ஊர் செல்வர். ஆனால், தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா என்பதால், அனைத்து மதத்தினரும் சொந்த ஊர் சென்று ஓட்டளித்து திரும்புவர்.
இதை அதிகாரிகள் சரியாக கணித்து, அதற்கேற்ப திட்டமிட்டு, கூடுதல் எண்ணிக்கையில் சிறப்பு பஸ்களை இயக்கியிருக்க வேண்டும். இது தவிர, சென்னையின் பல இடங்களில் இருந்து, கிளாம்பாக்கம் முனையத்திற்கு போதிய அளவில், மாநகர பஸ்கள் இயக்கவில்லை.
இதனால், கூடுதல் கட்டணம் செலுத்தி, ஆட்டோ, கால்டாக்சி பிடித்து, கிளாம்பாக்கம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. குடும்பத்தோடு, விடிய விடிய காத்திருந்தும், பல ஆயிரம் பேருக்கு பஸ் வசதி கிடைக்கவில்லை. இதனால், சிலர் ஓட்டளிக்க சொந்த ஊர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பது, ஜனநாயக படுகொலைக்கு சமமானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை மட்டுமல்லாமல், கடலுார், விழுப்புரம், திருப்பூர் உட்பட, மாநிலம் முழுதும் பல நகரங்களிலிருந்து, தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த மக்களும், போதிய பஸ் வசதி இன்றி அவதிப்பட்டனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்