கட்சி நிர்வாகிகள் அதிருப்தி; திருமாவளவன் போட்டியிட தயக்கம்
வி.சி.க.,வின் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தி காரணமாக, காட்டுமன்னார்கோவில் தொகுதியில், தான் போட்டியிடுவது குறித்து திருமாவளவன் யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில், வி.சி.க.,வுக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வேட்பாளர்கள் பட்டியலை மார்ச் 29ல் திருமாவளவன் வெளியிட்டார். தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் மற்றும் கட்சியின் முக்கிய மாநில நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதிருப்தி அடைந்த நிர்வாகிகள், வழக்கமான கட்சிப் பணிகளை தவிர்த்து வருகின்றனர். திருமாவளவனுடன் பேசுவதையும் குறைத்துள்ளனர்.
மாநில நிர்வாகிகளின் செயல், திருமாவளவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை, மூன்று வி.சி.க., வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். திருமாவளவன் தவிர மற்றவர்கள், இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
திருமாவளவன், கடைசி நாளான 6ம் தேதி மனு தாக்கல் செய்ய உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் பேசிய திருமாவளவன், வேண்டுமானால் காட்டுமன்னார்கோவில் தொகுதியில், தான் போட்டியிடுவதை தவிர்த்து விடுவதாக கூறியுள்ளார்.
அதற்கு நிர்வாகிகள், 'நீங்களே போட்டியிடுங்கள்' என தெரிவிக்க, 'நிர்வாகிகள் அனைவரும் பழையபடி கட்சி பணிகளில் ஈடுபட்டால் மட்டுமே நான் போட்டியிடுவேன்' என தெரிவித்துஉள்ளார்.
எனவே, அவர் போட்டியிடுவாரா, இல்லையா என்பது, வரும் 6ம் தேதி தெரியும் என அவரது கட்சியினர் தெரிவித்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்