ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின்; 'சிட்டிங்' அமைச்சர்களுக்கு 'செக்'
சென்னை: தி.மு.க., அமைச்சர்களுக்கு 'செக்' வைக்கும் விதமாக, இந்த தேர்தலில் அவர்களை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் களமிறக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க., கூட்டணி ஏற்கனவே பலமாக உள்ள நிலையில், தே.மு.தி.க.,வையும் எங்கள் கூட்டணியில் சேர்த்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.
சமீபத்திய கள நிலவரம் குறித்த அறிக்கை, உளவுத்துறை வாயிலாக முதல்வருக்கு கிடைத்துள்ளது. அதில், பல அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, முதல்வரின் குடும்பத்தில் நடந்த ஆலோசனையில், 'பல அமைச்சர்கள், தங்கள் மாவட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டுவதால், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில், தி.மு.க., சார்பில் பலமில்லாத வேட்பாளர்களை பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது' என பேசப்பட்டுள்ளது.
எனவே, ஜெயலலிதா பாணியை பின்பற்ற, ஸ்டாலின் தரப்பு முடிவு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வந்த விஸ்வநாதனை, கடந்த 2016 தேர்தலில், தற்போதைய தி.மு.க., அமைச்சர் பெரியசாமிக்கு எதிராக ஆத்துார் தொகுதியில் ஜெயலலிதா களம் இறக்கினார். அங்கு, விஸ்வநாதன் தோல்வி அடைந்தார்; எனினும், பெரியசாமிக்கு கடும் சவாலாக இருந்தார்.
தற்போதைய 'சிட்டிங்' அமைச்சர்கள் பண பலத்துடன் வசதியாக உள்ளனர். இதேபோல், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களும் பண பலத்துடன் உள்ளனர். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிட்டிங் அமைச்சர்களை, அவர்கள் வழக்கமாக போட்டியிடும் தொகுதிகளில் களமிறக்குவதற்கு பதிலாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் களமிறக்க, ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
தேர்தல் களத்தில் கடும் போட்டியை எதிர்கொண்டு, வெற்றி பெற்றால் மட்டுமே எதிர்காலம் உண்டு என்பதால், அமைச்சர்கள் கடுமையாக பணியாற்றி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஸ்டாலின் தரப்பு கருதுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்