டெண்டர், சேலஞ்ச், பிராக்சி ஓட்டு! 3 முக்கிய ஓட்டு முறைகள்
- நமது சிறப்பு நிருபர் -
ஜனநாயகத் திருவிழாவில் முதல்முறையாக வாக்களிக்கப் போகும் இளம் தலைமுறையினர், ஓட்டுச்சாவடிகளில் எதிர்பாராமல் ஏற்படும் சில சிக்கல்களுக்குத் தேர்தல் ஆணையம் வைத்துள்ள தீர்வுகளையும், சிறப்பு வசதிகளையும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பொதுவாக நாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கிறோம். அரசுப் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்களிக்கின்றனர். இவற்றைத் தாண்டி 'டெண்டர்', 'சேலஞ்ச்' மற்றும் 'பிராக்சி' என மூன்று முக்கிய ஓட்டு முறைகள் உள்ளன.
1. டெண்டர் ஓட்டு
நீங்கள் ஓட்டுச்சாவடிக்குச் செல்லும்போது, உங்கள் பெயரில் ஏற்கனவே யாரோ கள்ள ஓட்டுப் போட்டுவிட்டதாகத் தெரிந்தால் பதற்றப்பட வேண்டியதில்லை. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உங்கள் அடையாளச் சான்றுகளைக் காட்டி உறுதிப்படுத்தினால், அவர் உங்களுக்கு 'பேலட் பேப்பர்' (வாக்குச் சீட்டு) வழங்கி வாக்களிக்க அனுமதிப்பார். இதற்குத்தான் 'டெண்டர் ஓட்டு' என்று பெயர். இது இயந்திரத்தில் பதிவாகாது என்றாலும், வாக்கு எண்ணிக்கையின்போது முடிவுகள் மிக நெருக்கமாக இருந்தால் மட்டுமே இந்த ஓட்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. 'சேலஞ்ச்' ஓட்டு
நீங்கள் ஓட்டளிக்கச் செல்லும்போது, அங்கிருக்கும் ஏதேனும் ஒரு கட்சியின் முகவர், 'நீங்கள் உண்மையான வாக்காளர் இல்லை' என்று ஆட்சேபனை தெரிவிக்கலாம். அப்படி அவர் 'சேலஞ்ச்' செய்ய வேண்டுமென்றால், தேர்தல் அலுவலரிடம் 2 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பின் அலுவலர் உங்களின் ஆவணங்களைச் சரிபார்ப்பார். நீங்கள் உண்மையான வாக்காளர் என்பது உறுதியானால், உங்கள் ஓட்டைப் பதிவு செய்யலாம். முகவரின் குற்றச்சாட்டு தவறாகும்பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புண்டு.
3. 'பிராக்சி' ஓட்டு
நாட்டின் எல்லையில் முப்படைகளில் பணியாற்றும் வீரர்களுக்காக இந்த வசதி உள்ளது. அவர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாத பட்சத்தில், அந்தந்த ஊர்களில் வசிக்கும் தங்களின் ரத்த உறவுகள் (தந்தை, தாய், மனைவி) மூலம் வாக்களிக்கலாம். இதற்கென முன்னரே அனுமதி பெற்றிருக்க வேண்டும். இவர்களும் இயந்திரத்தில் ஓட்டளிக்க முடியாது; 'பேலட் ஷீட்' மூலமே தங்களின் வாக்கைச் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
Advertisement

உருப்படியான செய்தி!