Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அறந்தாங்கி தொகுதியை மீண்டும் பெற மகனுக்காக போராடும் திருநாவுக்கரசர்

அறந்தாங்கி தொகுதியை மீண்டும் பெற மகனுக்காக போராடும் திருநாவுக்கரசர்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது நிருபர் -

'அறந்தாங்கி தொகுதியை மகனுக்கு மீண்டும் பெறுவதற்காக, 17 'சிட்டிங்' தொகுதி களைப் பெற வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், போர் க்கொடி துாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அறந்தாங்கி தொகுதியில், 1977 முதல் 1996ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஆறு முறை, திருநாவுக்கரசர் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். கடந்த 2021ல் அவரது மகன் ராமச்சந்திரன் வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார்.

அத்தொகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக தி.மு.க., போட்டியிடவில்லை. தொடர்ந்து, திருநாவுக்கரசர், அவரது மகன் போட்டியிட்டு வருவதால், உதயசூரியன் சின்னத்தை மக்கள் மறந்துவிடும் நிலை உள்ளது.

எனவே, இம்முறை கண்டிப்பாக, தி.மு.க., போட்டியிட வேண்டும் என, தொகுதியின் நான்கு தி.மு.க., ஒன்றிய செயலர்கள், நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள், கட்சி தலைமையிடம் வலியுறுத்தி உள்ளனர்.

ஆளுங்கட்சியின் 'பென்' நிறுவனம் எடுத்த 'சர்வே' அறிக்கையில், ராமச்சந்திரன் போட்டியிட்டால் தோல்வி உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் அறந்தாங்கி தொகுதியை ராமச்சந்திரனுக்கு பெறுவதற்கான முயற்சியில், திருநாவுக்கரசர் ஈடுபட்டுள்ளார்.

இதை மையமாக வைத்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், 'தி.மு.க., தாங்கள் வெற்றி பெற முடியாத தொகுதிகளை, காங்கிரசுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளது. கொங்கு மண்டலத்தில் சிக்கலான தொகுதிகளை, நம்மிடம் தள்ள பார்ப்பர்.

'அதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு வாங்கினால், தோல்வியே மிஞ்சும். எனவே, 17 'சிட்டிங்' எம்.எல்.ஏ., தொகுதிகளை கண்டிப்பாக பெற்றாக வேண்டும்' என்றார்.

அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த, கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், 'தி.மு.க., எடுத்துள்ள கள ஆய்வில் காங்கிரசுக்கு சாதகமில்லாத தொகுதிகளையும் அடையாளம் கண்டுள்ளனர்.

'அதில், காங்கிரசின் சில 'சிட்டிங்' தொகுதிகளும் அடங்கும். எனவே, அவர்கள் சொல்வதைக் கேட்டால் தான் நாம் வெற்றி பெற முடியும்' என்று கூறியுள்ளார். இதனால், தற்போது உள்ள 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளை மீண்டும் வாங்குவதா, வேண்டாமா என, கட்சியில் விவாதம் எழுந்துள்ளது.

Advertisement