'டார்ச்லைட்' கமல்ஹாசனுக்கு திருமாவளவன் திடீர் வக்காலத்து
சென்னை: 'சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வேண்டும். அவர்களை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கோருவது ஏற்புடையது இல்லை,' என, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. இதில், மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல், கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை.
கமல்ஹாசன், மக்களின் நன்மதிப்பை பெற்ற திரை கலைஞர் மட்டுமின்றி, நான்கு சதவீத ஓட்டு வங்கி உடைய அரசியல் கட்சி தலைவர். அவர், நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் கூட்டணிக்கு நலம்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், மக்கள் நீதி மய்யத்திற்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்ட நெருடல், அக்கட்சி இம்முடிவை எடுக்க காரணமாக அமைந்து விட்டது. இவை நாகரிகமான அணுகுமுறை என பெருமிதப்பட்டாலும், நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., தங்களது சின்னத்திலேயே கூட்டணி கட்சிகளை போட்டியிட வேண்டும் என கோருவது ஏற்புடையது இல்லை. இவை, அக்கட்சியின் சுதந்திரமான அரசியலை முடக்கிவிடும்.
எனவே, தொகுதி எண்ணிக்கை எதுவானாலும், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள, 'டார்ச்லைட்' சின்னத்தில் போட்டியிட அனுமதித்து, கூட்டணி மீதான நன்மதிப்பை உயர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்