10 'சீட்'டுக்கு குறைவாக பெற்றால் பதவி விலகுவோம்: தே.மு.தி.க.,வில் 'திடீர்' போர்க்குரல்
சென்னை: 'தி.மு.க., கூட்டணியில், 10 'சீட்'களுக்கு குறைவாக பெற்றால், பதவி விலகுவோம்' என, தே.மு.தி.க., மாவட்டச்செயலர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் , சமீபத்தில் இணைந்த தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' வழங்கப்பட்டது. ஆனால், அக்கட்சிக்கு எத்தனை சட்டசபை தொகுதிகள் தரப்படும் என்பதை, தி.மு.க., உறுதி செய்யவில்லை.
இந்நிலையில், எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவும் நிலையில், 10 தொகுதிகள் வரை பெறாவிட்டால், பதவி விலகப் போவதாக, சில மாவட்டச் செயலர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
அ.தி.மு.க., கூட்டணியில், கடந்த 2011 தேர்தலில், 41 தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிட்டது. மக்கள் நலக் கூட்டணி மற்றும் அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 2016 மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களில், 100 தொகுதிகளுக்கு மேல் தே.மு.தி.க., போட்டியிட்டது.
தற்போது, தி.மு.க., கூட்டணியில், ஒற்றை இலக்கத்தில் 'சீட்' பெறப்போவதாக தகவல் பரவுகிறது.
தி.மு.க.,விடம், 10 தொகுதிகளுக்கு குறைவாக பெறக்கூடாது என, மாவட்ட செயலர்கள் சிலர் குரல் எழுப்ப துவங்கியுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், மாவட்டச்செயலர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
அதில், தற்போதைய அரசியல் சூழலை விளக்கமாக எடுத்து சொல்லி, அவர்களை சமாதானப்படுத்த தே.மு.தி.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்