தேர்தலுக்கு பின்பு அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறி: திருமாவளவன் ஆரூடம்
கள்ளக்குறிச்சி: '' சட்டசபை தேர்தலுக்கு பின்பு அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் அவர் பேசியதாவது: கூட்டணி கட்சிகளுக்கு துரோகம் இழைப்பது தான் பாஜவின் அரசியல் பண்பு. அது தான் நீண்ட காலமாக இருந்து வருகிறது. யார் கூட இருந்து தோளில் சுமக்கின்றனரோ அவர்களை வீழ்த்தி மிதிப்பது தான் பாஜவின் பண்பு. தற்போது தமிழகத்தில் அதிமுக 2வது இடத்தில் இருப்பது பாஜ கண்ணை உறுத்துகிறது.
பாஜவின் நோக்கம்
அதிமுகவை வீழ்த்திவிட்டு 2வது இடத்திற்கு வர வேண்டும் என்பது தான் பாஜவின் நோக்கம். அதனால் தான் பாஜவை முன்னிறுத்துகிறார்கள். பாஜ 27 இடங்களில் போட்டியிடுகிறது. தமாகாவும் 5 இடங்களில் போட்டியிடுகிறது. அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துள்ளார். இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகப் போகிறது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
இதன் பிறகு, செய்யூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிந்தனை செல்வனை ஆதரித்து திருமாவளவன் பேசியதாவது:நாம் மோடியா லேடியா என ஜெயலலிதா சவால் விட்டவர். இபிஎஸ் சவால் விட முடியுமா?திமுக உடன் கூட்டணி வைத்துள்ளோம். திமுக அரசை சிறுத்தைகளின் அரசாக நம்மால் ஏற்க முடியும். நம்ப முடியும். திமுக தலைமையிலான அரசு, விசிகவின் அரசாக இயங்க முடியும்..பாஜ , பாமக உடன் எப்போதும் கூட்டணி கிடையாது.
எதிர்காலம் முக்கியம்
எங்களுக்கு எத்தனை இடங்கள் என்பது முக்கியமில்லை. எங்கள் எதிர்காலம், தமிழகத்தின், தமிழ் மக்களின் எதிர்காலம் முக்கியம். மிட்டாய் காட்டி எங்களை ஏமாற்ற முடியாது. ஏமாறும் சராசரி சக்திகள் நாங்கள் அல்ல. அதனால் தான் திமுக உடன் உள்ள உறவை உடும்பு பிடி உறவு என்று சொல்கிறேன். இதற்கு காரணம் கொள்கை பிடிப்பு. நாம் பேசும் சமூக நீதி அரசியலை திமுக பேசுகிறது. நாம் எதிர்க்கும் வலதுசாரி அரசியலை திமுக எதிர்க்கிறது. நாம் எதிர்க்கும் மதவாத அரசியலை காங்கிரஸ் எதிர்க்கிறது. நாம் எதிர்க்கும் ஜாதிவாரி அரசியலை இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள். நாம் எதிர்க்கும் வெறுப்பு அரசியலை இஸ்லாமிய கட்சிகள் எதிர்க்கின்றன.
நாம் பேசும் சகோதரத்துவ அரசியலை திமுக பேசுகிறது. இதனால் தான் கொள்கை சார்ந்து திமுக உடன் இருக்கிறோம்.இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்