Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தபால் ஓட்டு போட முடியாமல் சென்னை போலீசார் தவிப்பு

தபால் ஓட்டு போட முடியாமல் சென்னை போலீசார் தவிப்பு

சென்னை: சென்னை காவல் துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான போலீசார், தபால் ஓட்டு போட முறையான நடவடிக்கை எடுக்காததால், ஓட்டு போட முடியாமல் தவித்தனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து உள்ளிட்ட பிரிவுகளில், 30,000 போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு, கடந்த தேர்தலின் போது, தபால் ஓட்டு போட முடியாமல் போனது போல, இம்முறை நடக்காது. காவல் துறையில் உள்ளவர்கள் அனைவரும் தபால் ஓட்டு போட, அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக, சில வாரங்களுக்கு முன் சென்னை கமிஷனராக பதவி வகித்த அருண் தெரிவித்தார்.

ஆனால், இம்முறையும் தபால் ஓட்டு போட முடியாமல், ஆயிரக்கணக்கான போலீசார் தவித்தனர். மேலும், அவர்களது குடும்பத்தினரும் ஓட்டு போட முடியவில்லை.

இதுகுறித்து, சப் - இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியதாவது: தபால் ஓட்டு போடுவதற்கான விண்ணப்பத்தை, முன்பே அனைவரும் விண்ணப்பித்து விட்டோம். ஆனால், எங்களுக்கு தபால் ஓட்டு வரவில்லை. எங்களுக்கு விடுமுறையும் அளிக்கப் படுவதில்லை.

இதனால், எங்களது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு, சொந்த ஊர் சென்று ஓட்டு போட முடிய வில்லை. தேர்தல் ஆணையம், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என, விளம்பரமும், விழிப்புணர்வும் செய்தும், எந்த பயனும் இல்லை.

குறிப்பாக, சென்னை காவல் துறையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு தபால் ஓட்டு கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தேர்தல் நாளன்று, பொது போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். அப்போது தான், சென்னையிலிருந்து, 100 - 150 கி.மீ., துாரத்திற்குள் உள்ளவர்கள், அவர்களது சொந்த ஊர் சென்று ஓட்டு போட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement