போட்டித் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி மையம்
கோவை: ''பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு தயாராகும் விதத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கல்வி பயிற்சி மையம் ஏற்படுத்தி தரப்படும்,'' என, சிங்காநல்லுார் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராம் கூறினார்.
சிங்காநல்லுார் தொகுதிக்கு உட்பட்ட சவுரிபாளையம் மகாலட்சுமி கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அவர் நேற்று பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது:
சிங்காநல்லுார் தொகுதியில், பள்ளி, கல்லுாரிகள் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் விதத்தில், அதற்கான பயிற்சி அளிக்கும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய, ஒரு சிறப்பு பயிற்சி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தரமான ஆசிரியர்கள், புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள், தங்கும் வசதிகளுடன் கூடிய மிகச்சிறந்த மையமாக அது செயல்படும்.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பணிகளுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும். வங்கித் தேர்வுகள் முதல், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.,) தேர்வுகள் வரை இலவசமாகவும், தரமாகவும், பயிற்சி அளிக்கும் வகையில், இம்மையம் உருவாக்கப்படும்.
மாணவர்கள் கல்வி பயிலும் காலத்திலேயே அவர்கள் சொந்த காலில் நிற்க வேண்டும். அதைக்கருத்தில் கொண்டு உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
கடந்த, 2021 தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, சிங்காநல்லுார் தொகுதியில், எம்.எல்.ஏ., அலுவலகம் உட்பட, ஆறு இடங்களில், கட்டணமில்லா இ-சேவை மையம் செயல்படுத்தப்பட்டது. இதில், இதுவரை, 60 ஆயிரத்துக்கம் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இங்கு பணிபுரிவோருக்கு எங்களது சொந்த பணத்தை ஊதியமாக வழங்கி வருகிறோம். நாங்கள் இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். பொதுமக்கள் பயனடைவது தான் இலக்கு.
இவ்வாறு, அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்