சனாதனம் குறித்து சர்ச்சை கருத்து: தி.மு.க., - த.வெ.க.,வுக்கு பா.ஜ., கண்டனம்
சென்னை: 'தி.மு.க.,வும், த.வெ.க.,வும் மிக குறுகிய அரசியல் வரலாற்றிலேயே, ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நிரூபித்துள்ளன' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக - எம்.எல்.ஏ., முஸ்தபாவும் சனாதனம் குறித்து, சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
'சனாதனத்தை ஒழிப்பதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம்' என்று த.வெ.க.,வை சார்ந்த எம்.எல்.ஏ., ஒருவர் பேசியிருப்பது கண்டனத்திற்கு உரியது. மக்களின் மத நம்பிக்கை குறித்து, கண்டனத்திற்கு உரிய வகையில் பேசுவது தான், த.வெ.க., முன்வைக்கும் மாற்றமா.
தங்கள் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர், ஹிந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக கருத்து தெரிவிக்கும் போது, அதை கண்டுகொள்ளாமல் இருப்பது தான், 'அனைவருக்குமான அரசு' என்று விளம்பரப்படுத்தும் ஒரு அரசின் லட்சணமா இது.
மக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தி பேசியவர் மீது, கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது இருக்கும் வகையில், நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:
சட்டசபையில் தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய சில நாட்களிலேயே, த.வெ.க., - எம்.எல்.ஏ., முஸ்தபா, அந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது, மிகவும் வருத்தம் அளிப்பதுடன், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வழிகாட்டும் நித்திய தர்மத்தின் மீது, அவர்கள் மனதில் எவ்வளவு வெறுப்பை வைத்திருக்கின்றனர் என்பதையும் காட்டுகிறது.
தி.மு.க.,வும், த.வெ.க.,வும் தங்களின் மிக குறுகிய அரசியல் வரலாற்றிலேயே, மக்கள் முன்னிலையில், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நிரூபித்துள்ளன. சனாதன ஹிந்து தர்மத்தின் மீது தொடர்ந்து மேற்கொண்ட தாக்குதல், தங்களை எங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளன என்பதை, தி.மு.க., மறந்து விட்டது. அதையே, த.வெ.க.,வும் விரைவில் உணரும்.
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி:
ஒரு இஸ்லாமியர், குறிப்பாக ஒரு மக்கள் பிரதிநிதி, ஹிந்து மதம் குறித்து அவதுாறு பேசுவதும், ஒழிக்க போகிறோம் என்று கூறுவதும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல். சனாதன தர்மம் என்ற வாழ்க்கை முறையை விமர்சிக்கும் முஸ்தபா, இஸ்லாமிய மார்க்கத்தை விமர்சிப்பாரா.
உதயநிதி சட்டபையில் பேசியதையும், முஸ்தபா பேசியதையும் முதல்வர் விஜய் கண்டிக்கவில்லை. பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை முறையை விமர்சிப்பவர்களை கண்டிக்காது இருப்பது, முதல்வர் பதவிக்கு அழகல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்