30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு 'சீட்' கொடுத்து ஏமாந்த தி.மு.க., தலைமை
சென்னை: தி.மு.க.,வில் மீண்டும் 'சீட்' பெற்ற, 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் படுதோல்வியை தழுவியுள்ளனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், முதல் முறையாக தேர்தல் வியூக நிறுவனத்தின் அறிவுரைப்படி, தி.மு.க., தலைமை வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தியது; பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
ரகசிய கூட்டணி இதை தொடர்ந்து, 2024 லோக்சபா தேர்தலிலும் தேர்தல் வியூக நிறுவன அறிவுரைப்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு களமிறக்கப்பட்டனர். இத்தேர்தலிலும், தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளை தி.மு.க., கூட்டணி கைப்பற்றியது.
அதே பார்முலாவை நடப்பு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., தலைமை செயல்படுத்தியது. தேர்தல் வியூக நிறுவனத்தை, முதல்வரின் மருமகன் சபரீசன் சொந்தமாக உருவாக்கி கொண்டார்.
இந்த தேர்தல் வியூக நிறுவனத்துடன், அமைச்சர்கள், தி.மு.க., 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களும் ரகசிய கூட்டணி அமைத்தனர். தாங்கள் பரிந்துரைக்கும் வேட்பாளர்களை, கட்சி தலைமைக்கு பரிந்துரைக்கும்படி மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் பேசி முடித்தனர்.
படுதோல்வி இதேபோல, சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள், தேர்தல் வியூக நிறுவனத்தில் பொறுப்பில் உள்ளவர்களிடம் பரிந்துரை செய்ய சொல்லி, மீண்டும் சீட் பெற்றனர்.
இது தெரியாமல், 35க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு தி.மு.க., தலைமை போட்டியிட சீட் வழங்கியது.
இதில், 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், த.வெ.க., அலையில் சிக்கி படுதோல்வியை தழுவியுள்ளனர்.
தி.மு.க.,வின் கோட்டை என கூறப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் போட்டியிட்ட தி.மு.க., சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் பிரபாகர் ராஜா, எழிலன், மயிலை வேலு, எபினேசர், சுதர்சனம், சுந்தர், காரப்பாக்கம் கணபதி, கிருஷ்ணசாமி, கோவிந்தராஜன், அர்விந்த் ரமேஷ், வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோரும் தோல்வியை தழுவியுள்ளனர்.
தேர்தல் வியூக நிறுவனத்தின் பரிந்துரையை நம்பி, தி.மு.க., தலைமை ஏமாந்துள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்