தி.மு.க.,வை மேடையிலேயே எதிர்க்கும் தே.மு.தி.க., பிரேமலதா!
சென்னை: அ.தி.மு.க.வின் 'ஸ்லீப்பர் செல்' போல, தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா தொடர்ந்து தி.மு.க.வுக்கு எதிராக பிரசாரம் செய்வதால், முதல்வர் ஸ்டாலின் உட்பட தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூட்டணி அமைக்க அ.தி.மு.க., தி.மு.க. என இரு தரப்பிலும் பேரம் நடத்திய பிரேமலதா, இறுதியாக தி.மு.க. கூட்டணியில் இணைந்தார். அவரது கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியும், 10 சட்டசபை தொகுதிகளும் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஸ்டாலின்.
தலைவர்கள் அதிர்ச்சி
ஆனால், ஓட்டு வங்கியே இல்லாத தே.மு.தி.க.வுக்கு இத்தனை தொகுதிகளா? என்று கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் கடுப்பாயின. அதோடு, பிரசாரத்தில் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை பிரேமலதா மதிப்பதில்லை என்றும் புகார் எழுந்தது. அந்த சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பிரேமலதாவை அழைத்து ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
இந்நிலையில், சேலம் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, 'என் அண்ணன் ஸ்டாலின் ஆட்சியில் ஒரே குற்றச்சாட்டை மட்டுமே சொல்கின்றனர். பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இதை தவிர வேறு எந்த குற்றச்சாட்டையும் அவரது அரசு மீது சொல்ல முடியாது' என, பெரிய குண்டை துாக்கி போட்டார். மேடையில் இருந்த ஸ்டாலின், கமல் மற்றும் தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
அந்த பேச்சு பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில், திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் அடுத்த குண்டை வீசியுள்ளார் பிரேமலதா. தி.மு.க. வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியனை ஆதரித்து பேசிய பிரேமலதா கூறியதாவது:
ஸ்டாலின் சந்தேகம்
திருப்பரங்குன்றத்திற்கு பலமுறை வந்துள்ளேன். மலை உச்சியில் தீபம் ஏற்றுவதை பற்றி பேசுகின்றனரே தவிர, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் பேசவில்லை. முருகன் அருளால் நிச்சயம் தீபம் ஏற்றப்படும். மக்களின் வாழ்க்கையும் உயரும்.
இவ்வாறு பிரேமலதா பேசியதும் மொத்த கூட்டமும் திகைத்து நின்றது. தீபம் ஏற்ற விடாமல் ஸ்டாலின் அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் சூழலில், பிரேமலதா இவ்வாறு தி.மு.க.வுக்கு எதிரான கருத்தை வெளியிட்டது, வாய் தவறி வந்த வார்த்தைகள் அல்ல என அக்கட்சியினர் கருதுகின்றனர்.
அ.தி.மு.க.வின் 'ஸ்லீப்பர் செல்' தான் பிரேமலதா என்பது அம்பலமாகி விட்டது என சமூக வலைதளங்களில் தி.மு.க.வினர் கடுமையாக விமர்சிக்கின்றனர். சேலம் பேச்சு வாய் தவறியதால் வந்தது என பிரேமலதா அளித்த விளக்கத்தால் அமைதியான ஸ்டாலின், மீண்டும் அதே பாணியில் அம்பு விட்டிருப்பது குறித்து சந்தேகம் அடைந்துள்ளார். எனினும் உடனடியாக கருத்து சொல்லவில்லை.
இதுகுறித்து, தி.மு.க. நிர்வாகிகள் கூறியதாவது: ஐந்து ஆண்டுகளாக பெண்கள் நலனுக்காக அரசு அமல்படுத்திய திட்டங்களை, தி.மு.க. அல்லாத கட்சியை சேர்ந்த ஒரு பெண் எடுத்து சொன்னால் நல்லது என, தேர்தல் வியூக நிறுவனம் கூறியதை கேட்டு தான், தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்து, கூடுதல் முக்கியத்துவம் வழங்கினார் முதல்வர். ஆனால், பிரேமலதா சேம் சைடு கோல் போட்டு அதிர்ச்சி தருகிறார். இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கவலைப்படுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
நாளைய அதிர்ச்சி - அண்ணன் கஞ்சாவை கட்டுப்படுத்த தவறி விட்டார் , ஊழலை ஊக்குவிக்கிறார் , சட்டம் ஒழுங்கு குட்டிச்சுவர் ஆகிவிட்டது . ஆகவே திமுக கூட்டணிக்கு வோட்டு போடுங்கள் .
சீட்டும் அதிகம் பெற்றது தேமுதிக ...... ஒண்ணாம் நம்பர் காமெடியன் ஆக்கிட்டாங்க இந்தம்மா .......
கூட்டணி கட்சியையே கூட்டணியில் இருக்கும்போது அந்த கூட்டணி கட்சியின் பிரச்சார மேடையிலேயே அந்த கூட்டணி கட்சியின் ஆட்சியின் அவலங்களை இந்தக்கிழி கிழிக்கிறாங்கன்னா இந்தம்மா எதிர்க்க்கூட்டணியில இருந்திருந்தா ஸ்டாலினை உதயநிதியை கேடுகெட்ட திமுகவை டார் டாரா கிழிச்சி தூக்குல தொங்கவிட்டுருப்பாங்க போலயே.. ஆனா இதுதான் அதிமுக கூட்டணிக்கு பலன் அளிக்கும். அம்மா பிரேமலதா அம்மா தேர்தல் பிரச்சாரம் இன்னும் மூணுநாள் தான் இருக்கும்.. அதற்குள்ள உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு PERFORMANCE எதிர்பார்க்குறோம்.. வாழ்க உங்கள் தொண்டு.
இந்த அம்மா வேற எரிய நெருப்புல எண்ணெயை ஊத்திட்டாங்க போறபோக்க பாத்தா தோல்வி 2011 ஐ விட பலமா இருக்கும்போலருக்கே

நாளைக்கு எதிர்கட்சி ஜெயிச்சிட்டா ஹீஹீஹீ எதுக்கும் அந்த பக்கமும் ஒரு துண்டு போட்டு வைச்சுப்போம்.
ஒரே நேரத்தில் பல கட்சியிடம் நேரம் பேசும் எனக்கு இதெல்லாம்......