தி.மு.க.,வினரை ஓட விடுங்கள்: பா.ஜ., தலைவர் வேண்டுகோள்
புதுக்கோட்டை: ''சனாதனத்தை டெங்கு, மலேரியா கொசுவை அழிப்பது போல் அழிக்க வேண்டும் என பேசிய துணை முதல்வர் உதயநிதிக்கு, ஒவ்வொருவரும் தண்டனை கொடுத்தாக வேண்டும்,'' என பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் பேசியதாவது: தமிழகத்தில் ஊழலுக்கென்றே பிறந்தவர்கள் தி.மு.க.,வினர்; அவர்கள் தான், 'நம்பர் 1' கிரிமினல்கள்.
மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என தொடர்ந்து பஞ்சப்பாட்டு பாடி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு 3 லட்சம் கோடி ரூபாயை தமிழகத்துக்கு கொடுத்துள்ளது. அதையெல்லாம் கடந்து, 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தமிழக அரசை நடத்திய ஸ்டாலின், தமிழகத்துக்கு கடன் சுமையை ஏற்றிச் சென்றுள்ளார்.
இவ்வளவு கோடிகளை என்ன செய்தனர் என தெரியவில்லை. ஓட்டு கேட்டு தி.மு.க.,வினர் வரும்போது, இது குறித்து கேளுங்கள்; பதிலளிக்காமல் ஓட்டமாய் ஓடி விடுவர்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்தது தி.மு.க., அரசு தான். அதனால், இம்முறை நடக்கும் தேர்தலில், தி.மு.க.,வினரை ஒவ்வொரு ஹிந்து உணர்வாளரும் பழி வாங்க வேண்டும்.
சனாதனத்தை கொச்சைப்படுத்திய தி.மு.க.,வினர் ஆன்மிகத்தை கொச்சைப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
சனாதனத்தை டெங்கு, மலேரியா கொசுவை அழிப்பது போல் அழிக்க வேண்டும் என பேசிய துணை முதல்வர் உதயநிதிக்கு, ஒவ்வொருவரும் தண்டனை கொடுத்தாக வேண்டும். தேர்தலில் அவர்களை தோற்கடிப்பது தான், அவர்களுக்கு கொடுக்கும் சரியான தண்டனையாகும்.
தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்தால், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். இவ்வாறு நிதின் நபின் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்