எம்.எல்.ஏ., கனவால் மேயர் பதவி போச்சு; தோற்ற தி.மு.க., வேட்பாளர் 'அப்செட்'
தஞ்சாவூர்: உதயநிதியால் களமிறக்கப்பட்ட தி.மு.க., வேட்பாளர் தோல்வியை சந்தித்ததால், மேயர் பதவியும் போச்சு, எம்.எல்.ஏ.,கனவும் போச்சு என அப்செட்டில் உள்ளார்.
தஞ்சாவூர் தொகுதியில், தி.மு.க., சார்பில், கடந்த 2021 தேர்தலில் எம்.எல்.ஏ.,வான நீலமேகத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி மேயராக இருந்த ராமநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. உதயநிதி, முதல்வரின் மனைவி துர்கா ஆகியோர் வாயிலாக, வேட்பாளர் வாய்ப்பை ராமநாதன் பெற்றதாக கூறப்பட்டது.
ராமநாதன், தன் மேயர் மற்றும் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தலில் போட்டியிட்டார். பா.ஜ., சார்பில் முருகானந்தம், த.வெ.க., சார்பில் விஜய் சரவணன் போட்டியிட்டனர். தி.மு.க., கோட்டையாக தஞ்சாவூர் இருப்பதால், இருவரையும் வெற்றி பெறலாம் என, ராமநாதன் உறுதியாக இருந்தார்.
ஆனால், த.வெ.க., வேட்பாளர் சரவணன், வெற்றி பெற்று விட்டார். இதனால், மேயர் பதவியும் போச்சு, எம்.எல்.ஏ., கனவும் போச்சு என ராமநாதன் அதிர்ச்சியடைந்தார்.
மேயராக இருந்த ராமநாதன் மீது ஊழல் புகார்கள் எழுந்த நிலையில், அதுவே, அவரது தோல்விக்கு காரணமாக அமைந்ததாக, கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்