தி.மு.க., ஆட்சியில் கொசுக்களுக்கு கொண்டாட்டம்: பழனிசாமி கடும் தாக்கு
சென்னை: ''தி.மு.க., ஆட்சியில் கொசுக்களை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:
மக்களை கடுமையாக பாதிக்கும் கொசு, தெருநாய் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில், தி.மு.க., அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுகிறது.
மழை, குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் ஆரம்பிக்கும் சூழலில், தமிழகம் முழுதும் கொசுக்கள் பெருகி மக்களை வாட்டி வதைக்கிறது. மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், குப்பை மேடுகளை, சென்னை மாநகராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்காததே இதற்கு காரணம்.
கொசு மருந்து அடிக்கும் பணியாளர்களை, அந்தப் பணியை செய்ய விடாமல் சுய விளம்பரப் பணிகளுக்கு தி.மு.க., அரசு பயன்படுத்துகிறது.
நடப்பு நிதி ஆண்டில், கொசு ஒழிப்புக்காக சென்னை மாநகராட்சி 16.40 கோடி ரூபாய் ஒதுக்கியதாக கூறப்பட்டது. ஆனால், அந்தப் பணம் எங்கே போனது என்று தெரியவில்லை.
இதிலும் ஊழல் நடந்திருப்பதால் தான் கொசுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. தி.மு.க., ஆட்சியில் கொசுக்களுக்கு கொண்டாட்டம் தான்.
சென்னையில் கொசுக்கள் ராஜ்ஜியம் நடக்கிறது. கொசுக்களிடம் மாட்டிக்கொண்டு, மக்கள் படாதபாடுபடுகின்றனர். கொசுக்களால் கடந்த ஜனவரியில் 1,500- பேர், 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
தற்போது, 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கொசுக்களை ஒழிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்