புதுச்சேரி சட்டசபை தேர்தல்; ரங்கசாமி ராஜ்யம்!
நமது சிறப்பு நிருபர்
புதுச்சேரியில் மீண்டும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சியை பிடிக்கிறது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., - ல.ஜ.க., ஒரு அணியாகவும், காங்., - தி.மு.க,. கூட்டணி மற்றொரு அணியாகவும் களமிறங்கின. மேலும் த.வெ.க., மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்தனியாக போட்டியிட்டன.
மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ஓட்டு எண்ணிக்கை இரு கட்டங்களாக பிரித்து எண்ணப்படுகிறது. முதல் கட்டத்தில் 17 தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சியை பிடிக்கிறது.
இதுவரை வெளியான முடிவுகள்
* ரங்கசாமி கட்சி (என்.ஆர்.காங்.) - 9 தொகுதிகளில் வெற்றி, 2 தொகுதிகளில் முன்னிலை
* பாஜ- 2 தொகுதிகளில் முன்னிலை- 2 தொகுதிகளில் வெற்றி
* சுயேட்சைகள்- 3 தொகுதிகளில் வெற்றி
* காங்கிரஸ் -1 தொகுதியில் வெற்றி
* அதிமுக-1 தொகுதியில் வெற்றி
* லஜக- 1 தொகுதியில் வெற்றி
* நேமம் மக்கள் இயக்கம்- 1 தொகுதியில் வெற்றி
தவெக- 2 தொகுதிகளில் வெற்றி, 1 தொகுதியில் முன்னிலை
முன்னணியில் இருக்கும் 8 தொகுதிகளில் வெற்றி அறிவிக்கப்படாமல் உள்ளது. தற்போது நிலவரப்படி பாஜ கூட்டணி 16 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது.
யார் இந்த ரங்கசாமி!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு வயது 76. தட்டாஞ்சாவடி தொகுதியில் இருந்து தொடர்ந்து 4 முறை காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் ரங்கசாமி. 2001ல் அவருக்கு முதல்வர் பதவி தேடி வந்தது. 2006 தேர்தலிலும் முதல்வராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
கோஷ்டிப்பூசலுக்கு புகழ் பெற்ற காங்கிரஸ் கட்சியில், ரங்கசாமிக்கு எதிர்ப்பு வலுத்தது. உட்கட்சி மோதல் விஸ்வரூபம் அடைந்த நிலையில், 2008ல் பதவி விலகினார் ரங்கசாமி. அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கியவர், 2011 தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் முடிந்ததும், அதிமுகவை கழற்றி விட்டார். சுயேச்சை ஒருவரது ஆதரவுடன், மூன்றாம் முறையாக முதல்வராக பதவியேற்றார்.
ஆனால், 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அவரது கட்சிக்கு 8 இடங்களே கிடைத்தன. இதனால் 2016 முதல் 2021 வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். 2021ல் அவரது கட்சி ஆட்சியை கைப்பற்றியது. தேஜ கூட்டணியில் இணைந்து நான்காம் முறையாக முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி.
இந்த தேர்தலில் தேஜ கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த ரங்கசாமி, மீண்டும் வெற்றிமுகத்தில் இருக்கிறார். பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் அவரது கூட்டணி வெல்லும் நிலை உள்ளது. இதனால் அவர், ஐந்தாம் முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்