ரஜினி வார்த்தை முக்கியமானது: வானதி சீனிவாசன் கருத்து
திருப்பூர்: ''ரஜினியின் வார்த்தை எப்போதும், தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது,'' என்று திருப்பூரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பா.ஜ. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.
திருப்பூர் குமரன் சிலை முன், நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, பா.ஜ. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் எல்.கே.ஜி. குழந்தை முதல், 60 வயது வரை உள்ள பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. குழந்தைகளிடம் புத்தகத்தை கொடுப்பதற்கு பதிலாக, போதை பொருட்களை வழங்கும் அரசாக தி.மு.க. உள்ளது. சி.பி.ஐ. விசாரணை என்பது, செந்தில் பாலாஜிக்கு புதிதல்ல. கரூர் விவகாரத்தில், அவர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதே அனைவரின் சந்தேகமாக உள்ளது. அதனால் தான் அவரிடம் சி.பி.ஐ. விசாரிக்கிறது.
நடிகர் ரஜினி குறித்து அவதுாறான வார்த்தைகள் பேசியதற்கு, கண்டனம் தெரிவித்த அனைவருக்கும் அவர் மரியாதை நிமித்தமாக நன்றி தெரிவித்துள்ளார். ரஜினியின் வார்த்தை எப்போதும், தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் குறித்து தவறாக மதிப்பிடுவதோ, பேசுவதோ ஏற்புடையது அல்ல. அதுவும், அரசியலில் கத்துகுட்டியாக உள்ள நபர், பேசுவது கண்டிக்கத்தக்கது.
கீழடி, தமிழர் தொன்மை உள்ள இடம். அதனை மத்திய அரசு அகழாய்வு செய்ய முயன்ற போது, அதனை அனுமதிக்காத தி.மு.க. அரசு நாங்களே செய்து கொள்கிறோம் என சொன்னார்கள். தமிழர்கள் பாரம்பரியம், தொன்மை தி.மு.க., வுக்கு சொந்தமானது அல்ல. இது கோடிக்கணக்கான தமிழக மக்களுக்கு சொந்தமானது. இவ்வாறு, கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்