Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் ஸ்டாலின்: இபிஎஸ்

தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் ஸ்டாலின்:  இபிஎஸ்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஓமலுார் : தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் ஸ்டாலின். எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதை முறியடிக்கும் சக்தி, அ.தி.மு.க.,வுக்கு உண்டு என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் பேசினார்

சேலம் மாவட்டம் ஓமலுாரில், இபிஎஸ் பிரசாரத்தில் பேசியதாவது: மூப்பனார் பிரதமராவதை தடுத்தவர் கருணாநிதி. அப்துல் கலாமை இரண்டாவதாக ஆதரிக்க முடியாது என, திமுக சொல்லியது. அதனால் போட்டியில் இருந்து விலகினார். துணை ஜனாதிபதி தேர்வில், தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு எதிராக திமுக செயல்பட்டது. தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் ஸ்டாலின். எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதை முறியடிக்கும் சக்தி, அதிமுகவுக்கு உண்டு. தமிழ் தமிழ் என கூறி, தமிழை கொச்சைப்படுத்தியது திமுக.
கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்தது, திமுக அரசு. உலகிலேயே அதிக ஊழல் செய்த கட்சி என்றால் அது திமுக தான். இனி திமுகவை மக்கள் நம்பமாட்டார்கள். தமிழகத்துக்கு மட்டும் ஸ்டாலின் முதல்வர். ஆனால் சேலம் மாவட்டம், அதிமுக கோட்டை. இங்கு ஆட்சி செய்வது இபிஎஸ்

அதிமுக ஆட்சியில், திமுகவுக்கு பல போராட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டது. திமுக ஆட்சியில், அதிமுக போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக உள்ளேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். ஸ்டாலினை சந்திக்க முடியுமா?

தேர்தல் நேரத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்து தற்போது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என கூறி, அரசு ஊழியர்களுக்கு, ஸ்டாலின், 'அல்வா' கொடுத்துவிட்டார். தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, திருட்டுகள் நடக்கின்றன. அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

சர்வாதிகாரம்


வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் அருகில் இபிஎஸ் பேசியதாவது;தமிழகம் முழுவதும் எல்லா வீடுகளிலும் கருப்புக் கொடி கட்ட வேண்டும் என்று ஸ்டாலின் சொன்னார். யாராவது கட்டினார்களா.? .நான் கோவை, மேட்டூப்பாளையம், திருப்பூரில் சுற்றிச் சுற்றி பார்த்தேன். ஒரு வீட்டில் கூட கருப்புக் கொடி கட்டவில்லை. ஏனென்றால் மக்களுக்கு தெரியும். மத்திய அரசு உறுதி கொடுத்துவிட்டது. இபிஎஸ் சொன்னால் சரியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அதனால் யாரும் கருப்புக் கொடிகாட்டவில்லை.
இதுதான், ஸ்டாலினுக்கு கடைசித் தேர்தல். அதிமுக ஆட்சி அமைப்பதை ஸ்டாலின் வேடிக்கை பார்க்க வேண்டும். நாம் இந்த முறை வெற்றி பெற்று ஆட்சி அமைக்காவிட்டால், ஸ்டாலின் குடும்பம் சர்வாதிகார குடும்பமாக மாறிவிடும். கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின். மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. திமுக குடும்பத்திற்காக இருக்கும் கட்சி. திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், கனிமொழி, துர்கா ஸ்டாலின் என்று பல பேர் இயக்குநர்கள். ஸ்டாலின் சேர்மன். அப்படித்தான் திமுக இருக்கிறது.அது கட்சியாக இருந்தால் மக்களுக்குத் தேவையான சேவை செய்வார்கள். ஆனால், அது, கார்ப்பரேட் கம்பெனி. கொள்ளையடிப்பார்கள். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

கொள்ளையடித்த பணத்தில்

மேட்டூர் பேருந்து நிலையம் அருகே இபிஎஸ் பேசியதாவது; ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதல்வராக இருக்கலாம், சேலத்துக்கு அதிமுக தான் ஆளுங்கட்சி. நம் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்தக் கருத்துடன் இருக்கிறோம் திமுகவில் அப்படியா இருக்கிறது…? திமுகவுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரே கொள்கை என்கிறார் ஸ்டாலின்.
அப்படியிருந்தால் ஏன் புதுச்சேரி, கேரளாவில் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர்? இது நாடகம், மாநிலத்துக்கு மாநிலம் தக்கவாறு நடிப்பில் சிறந்தவர் ஸ்டாலின். சிவாஜியை விட சிறப்பாக நடிப்பார். தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இரண்டே முக்கால் மணி நேரம் பேசியது கிடையாது, அந்த சாதனையை நான் படைத்தேன். முதல்வரையே திணறடித்த கட்சி அதிமுக. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்பொது சிங்கம் மாதிரி தனியே சென்று பேசினார். திமுகவுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். மக்கள் பிரச்னை என்றால் அரசு கவனத்துக்கு கொண்டுசெல்லும் கட்சி அதிமுக. அதிமுக ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை என்கிறீர்கள். நான் என் சாதனையை சொல்கிறேன், நீங்கள் உங்க சாதனையைச் சொல்லுங்கள் என்றேன், அதற்கு பதிலே இல்லை. செய்தால்தானே சொல்ல முடியும். இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது, அப்போது தமிழ்நாட்டிலும் எடுக்கப்படும். கொள்ளையடித்த பணத்தை வைத்து மூக்குத்தி கொடுக்கிறார். 24 ஆயிரம் கோடி கையில் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அந்த மேஜிக் வித்தைக்கெல்லாம் அடிமையாகி விடாதீர்கள். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Advertisement