Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தேர்தலில் டில்லி அணியை வீழ்த்துவோம்: உதயநிதி

தேர்தலில் டில்லி அணியை வீழ்த்துவோம்: உதயநிதி

-நமது நிருபர் குழு -
கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க., வேட்பாளர்கள் சபரி கார்த்திகேயன் (கிணத்துக்கடவு), சுதாகர் (வால்பாறை), ஜெயக்குமார் (உடுமலை) மற்றும் பொள்ளாச்சி கொ.ம.க., வேட்பாளர் நித்தியானந்தன் ஆகியோரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி நேற்று பிரசாரம் செய்தார்.

அவர் பேசியதாவது: கிணத்துக்கடவு தொகுதிக்கு தி.மு.க., ஏராளமான திட்டங்களை செய்துள்ளது. சுந்தராபுரம், சிட்கோவில் தங்கநகை தொழில்பூங்கா அமைக்கும் பணி மற்றும் தொழிலாளர்கள் தங்கும் விடுதி, மதுக்கரை நகராட்சியில் ரூ.9 கோடி மதிப்பில் தார்சாலை, திருமலையம்பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் தார் சாலை என பல்வேறு திட்டப்பணிகளை செய்துள்ளோம்.

முதல்வர் ஸ்டாலின் சொன்னதுபோல இந்த தேர்தல் தமிழக அணிக்கும், டில்லி அணிக்குமான தேர்தல். டில்லி அணியை வீழ்த்தி தமிழக அணியாகிய தி.மு.க., அணியைவெற்றி பெற வைப்போம்.

பொள்ளாச்சி தனி மாவட்டம் தற்போது, பொள்ளாச்சி தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளீர்கள்; மீண்டும் ஆட்சி அமைந்தவுடன், முதல்வரிடம் பேசி, மாவட்டம் உருவாக்கப்படும். தி.மு.க., ஆட்சியில், கால்நடை மருத்துவக்கல்லுாரி, அரசு மருத்துவமனை மேம்பாடு, பி.ஏ.பி., திட்டத்தை உருவாக்கியவர்களுக்கு சிலை, இனாம் நிலம், கோவில் நிலங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தனி மாவட்ட வருவாய் அலுவலர் நியமனம் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கட்டணமில்லா பஸ், காலை உணவுத்திட்டம், 8ம் வகுப்பு வரை விரிவாக்கம், மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்வு, 35 லட்சம் கல்லுாரி மாணவர்களுக்கு லேப்டாப், கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ரூ.1,500, 10 லட்சம் பேருக்கு வீடு கட்டித்தரும் திட்டம், அனைத்து மகளிருக்கும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிக்கொள்ள, ரூ.8 ஆயிரத்திற்கு கூப்பன் வழங்கப்படும்.

தேர்தலை காரணம் காட்டி, மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்; காலை, 6:30 மணிக்கு, மூன்று மாதம், கோடை கால சிறப்பு நிதி என ரூ.5 ஆயிரமாக செலுத்தப்பட்டது. இவ்வாறு, பேசினார்.

கன்னா பின்னான்னு திட்டறாரு!: காங்கயத்தில் உதயநிதி கதறல்


திருப்பூர் மாவட்டம், காங்கயம் தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் சாமிநாதன், தாராபுரம் வேட்பாளர் இந்திராணி ஆகியோரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி நேற்று காங்கயத்தில் பேசியதாவது: அரசியலில் மொரட்டு தொண்டர் கேள்விப்பட்டு இருப்பீங்க. மொரட்டு அடிமை பாத்திருப்பீங்களா! இதைத்தான் சொன்னேன். இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி 'எனக்கு என்ன அனுபவம் இருக்கு' என கேட்கிறார். ஆமாம், எனக்கு அனுபவம் இல்லை. இதோ இந்த அனுபவம் எனக்கு கிடையாது என சொன்னேன். (சசிகலா காலில் பழனிசாமி விழுந்து ஆசிபெறும் போட்டோவை காண்பித்தார்). இது, இப்ப பெரிய 'உலக புகழ்ப்பெற்ற' போட்டோவாயிருச்சு. இந்த போட்டோவால இப்ப அவரு என்ன எப்படி திட்டுகிறார் தெரியுமா. கன்னா பின்னான்னு திட்டுறார்; என் உயிரை வாங்குகிறான் என்கிறார். இதெல்லாம் எனக்கு தேவையா? இவ்வாறு அவர் பேசினார்.


பஸ் ஸ்டாண்ட் மூடல்: மக்கள் அவதி


திருப்பூர் மாவட்டம், காங்கயம் ரவுண்டானா பகுதியில் நேற்று துணை முதல்வர் உதயநிதி காலை 9:00 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 10:20க்கு தான் வந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காகப் போலீசார் காலை 9:35 மணிக்கே பஸ் ஸ்டாண்டை தடுப்புகள் வைத்து மூடினர். இதனால் சென்னிமலை, கோவை உள்ளிட்ட மார்க்கங்களிலிருந்து வந்த பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் வராமல் திருப்பி விடப்பட்டன.
தகவல் அறியாத பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து, பின்னர் பல கி.மீ., நடந்து சென்று பஸ் ஏறிச்சென்றனர். குறிப்பாக, தொலைதுார பஸ்கள் ஊருக்குள் சுற்றிச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உதயநிதி பிரசாரத்தை முடித்துச் சென்ற பின்னரே, காலை 11:15 மணிக்கு நிலைமை சீராகி பஸ் ஸ்டாண்ட் திறக்கப் பட்டது. நகரின் மையப்பகுதியை மணிக்கணக்கில் முடக்கும் காவல்துறையின் இந்த நடைமுறையை மாற்றப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisement