Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 யாருக்கு மெஜாரிட்டி: குழம்பும் தமிழக கட்சிகள்

 யாருக்கு மெஜாரிட்டி: குழம்பும் தமிழக கட்சிகள்

சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளால், யாருக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என தெரியாமல், தமிழக அரசியல் கட்சிகள் பெரும் குழப்பத்தில் உள்ளன.
கடந்த 23ம் தேதி, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது.

அதை தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்கும் என, 'என்.டி.டி.வி., பீப்பிள்ஸ் பல்ஸ்' உட்பட, 10 நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என, 'டைம்ஸ் நவ் ஜே.வி.சி., சி.என்.என்.,' ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. த.வெ.க., 91 முதல் 120 இடங்களை பிடிக்கும் என, 'இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா', நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 'டுடே சாணக்யா' நிறுவனம், நேற்று வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், தி.மு.க.,வுக்கு 114 - 136; அ.தி.மு.க.,வுக்கு 34 - 56; த.வெ.க.,வுக்கு 52 - 74; மற்றவர்களுக்கு 0 - 2 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான நிறுவனங்கள், தி.மு.க., கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என கூறினாலும், டைம்ஸ் நவ், சி.என்.என்., போன்ற பிரபல நிறுவனங்கள், அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என கூறியிருப்பது, தி.மு.க.,வினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீண்ட காலமாக கருத்து கணிப்புகளை நடத்தி வரும் இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம், த.வெ.க.,வுக்கு 91 முதல் 120 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், 'டுடே சாணக்யா' நிறுவனம் 52 முதல் 74 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறியிருப்பது, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியா டுடே கணிப்பு உண்மையானால், த.வெ.க., ஆட்சிக்கே வந்து விடும். டுடே சாணக்யா சொல்வது போல நடந்தால், அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் அல்லது யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத திரிசங்கு நிலை ஏற்படும்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், 8.22 சதவீத ஓட்டுகளை பெற்ற, நாம் தமிழர் கட்சிக்கு, இம்முறை ஓட்டுகள் குறையும் என, தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் கூறுகின்றன.
இதனால், தமிழக அரசியல் கட்சிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. த.வெ.க., கணிசமான இடங்களை வென்றால், யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்படுமோ என்ற அச்சம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
கருத்து கணிப்புகளும் குழப்புவதால், தமிழக அரசியல் கட்சிகள், தேர்தல் முடிவுகளை கணிக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளன. மே 4ம் தேதி முடிவு வந்தால் மட்டுமே, உண்மை நிலை தெரிய வரும்.

வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை


முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை அறிவாலயத்தில் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள், வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். 'அனைவரும் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை கவனமுடன் இருக்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.
'ஆட்சியில் பங்கு கேட்போம்' என, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் கூறிய கருத்து பற்றியும், அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ''தி.மு.க.,வுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால், 'நாங்கள் தான் வெற்றி பெறுவோம்' என, எதிர்க்கட்சிகள் சொல்வது அபத்தம். கருத்து கணிப்புகளை தாண்டி, தி.மு.க., பெரும் வெற்றி பெறும்,'' என்றார்.




குழப்பத்தை உருவாக்க தி.மு.க.,வினர் முயற்சி


கடந்த 2011 தேர்தலின்போது, தி.மு.க., ஆட்சி தொடரும் என கருத்து கணிப்புகள் கூறின. இது குறித்து ஜெயலலிதாவிடம் ஊடகங்கள் கேட்டபோது, '218 தொகுதிகளுக்கு குறையாமல் வெல்வோம்' என்றார். அ.தி.மு.க., கூட்டணி 203 இடங்களில் வென்றது. கடந்த 2016 தேர்தலிலும் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, மீண்டும் அ.தி.மு.க.,வே ஆட்சி அமைத்தது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., 210 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தி.மு.க., வெல்லப் போகிறது என்ற மாய பிம்பத்தை உருவாக்கி, ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்வதற்கும், கலவரம் செய்து குழப்பத்தை உருவாக்குவதற்கும் அக்கட்சியினர் முயற்சி செய்வர்.
- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,

Advertisement